பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர், பிரெஞ்சு அணியான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனுடன் ஆறு சீசன்கள் இருந்த பின், அந்த அணியை விட்டு விலகி, சவுதி அரேபிய அணியான அல்-ஹிலால் அணிக்காக தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த செய்தியை செவ்வாயன்று இரு கிளப்புகளும் அறிவித்தன. 


அல் ஹிலாலில் நெய்மர்


எற்கனவே கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் கரீம் பென்சிமா என மிகப்பெரிய ஜாம்பவான் வீரர்கள் சவுதி அரேபிய கிளப் அணிகளுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 31 வயதான நெய்மர் சவுதி அரேபிய அணியான் அல் ஹிலால் அணிக்கு தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். PSG அணிக்காக 173 போட்டிகளில் 118 கோல்களை அவர் ஆறு சீசன்களில் அடித்துள்ளார். நெய்மர் ஐந்து லிகு 1 பட்டங்களையும் மூன்று பிரெஞ்ச் கோப்பைகளையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 






எவ்வளவு தொகை பெறுவார்?


இது குறித்து அல் ஹிலால் அணி விடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் நெய்மர் பேசுகிறார். அதில் "நான் இங்கே சவூதி அரேபியாவில் இருக்கிறேன், ஐயம் ஹிலாலி" என்கிறார். தற்போது நெய்மர் ஆல் ஹிலால் அணிக்காக 100 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் இது 900 கோடியை தாண்டுகிறது. இது மட்டுமின்றி அவர் இரண்டு ஆண்டுகளில் 250 மில்லியன் யூரோ வரை பெறுவார் என்று கணிக்கப்படுகிறது. இதனால் அவர் பெரும் தொகை இந்திய ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,270 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அல்-ஹிலால் பாரம்பரியமாக சவூதி அரேபியாவின் சிறந்த கிளப்புகளில் ஒன்றாக உள்ளது. நான்கு முறை ஆசிய சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்களாக முடிசூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: World Cup 2023: உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது? ஐசிசி கொடுத்த அதிரடி அப்டேட்!


PSG தலைவர் உருக்கம்


அதே போல PSG யும் அவர் விடைபெறுவதை குறிப்பிட்டு பதிவு வெளியிட்டிருந்தது. "உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான நெய்மர் போன்ற அற்புதமான வீரரிடம் விடைபெறுவது கடினம்" என்று PSG தலைவர் நாசர் அல்-கெலைஃபி அறிக்கையில் தெரிவித்துள்ளார். "அவர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனுக்கு வந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. கடந்த ஆறு வருடங்களாக எங்கள் கிளப்புக்கும் எங்கள் திட்டத்திற்கும் அவர் பங்களித்ததை என்னால் மறக்க முடியாது. நெய்மர் எப்போதும் எங்கள் வரலாற்றில் ஒரு பெரிய பகுதியாக இருப்பார்." என்று அவர் மேலும் கூறினார்.






சவுதி அரேபிய அணிகளில் முன்னணி வீரர்கள் 


நெய்மர் 2017 இல் பார்சிலோனாவிலிருந்து PSG அணிக்காக 222 மில்லியன் யூரோக்கள் ($242 மில்லியன்) பெற்று அணியில் சேர்ந்தார். அப்போது அவர்தான் உலகில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரராக இருந்தார். அதன் பிறகு எம்பாப்பே அதைவிட அதிக தொகைக்கு அந்த அணிக்கு சென்றார். ஆனால் அதன் பிறகு சவுதியின் அல்-நாசர் கிளப்பில் சுமார் 1,500 கோடி ரூபாய்க்கு (£173M) மேல் ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரை கிட்டத்தட்ட நெருங்கிய கரீம் பென்சிமா 172 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சமீபத்தில் இதே அல் ஹிலால் அணி நட்சத்திர இளம் வீரர் கைலியன் எம்பாப்பேவை 300 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்தது. ஆனால் அந்த அணியின் நிர்வாகிகளை அப்போது அவர் சந்திக்க மறுத்துவிட்டார். அவர்களை சந்தித்திருந்தால் தற்போது அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரராக இருந்திருப்பார்.