விளையாட்டு வீரர்களில் மிகவும் கட்டுப்பாடான உணவு பழக்கங்களை கொண்டவர் ரொனால்டோ. அதுவே இந்த வயதிலும் அவர் சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நொறுக்கு தீனிகள் எதுவுமே ரொனால்டோ எடுத்து கொள்ளமாட்டார். ஒரு முறை இது குறித்து பேசிய ரொனால்டோ "நான் என் மகனிடம் உணவு விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வேன், சில நேரங்களில் அவர் கோகோ கோலா மற்றும் ஃபாண்டாவை குடிப்பார், மொறுமொறுப்பான பண்டங்களை சாப்பிடுவார், எனக்கு அது பிடிக்காது என்று அவருக்குத் தெரியும்" என தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு குளிர்பானங்களை தவிர்க்கும் ரொனால்டோ, கோகோ கோலா பாட்டிலை நகர்த்தி வைத்து நேற்று வைரலானார்.




ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பையில் ஹங்கேரி அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் தனது ஆட்டத்தை தொடங்கியது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் அணி புடாபெஸ்டில் உள்ள ஃபெரெங்க் புஸ்காஸ் மைதானத்தில் ஹங்கேரியை எதிர்கொண்டது. இந்த முக்கியமான போட்டிக்கு முன்பாக ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடன் ரொனால்டோ செய்தியாளர் சந்திப்புக்கு வந்து அமர்ந்தபோது, கோகோ கோலாவின் இரண்டு பாட்டில்கள் ரொனால்டோ முன்னிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதை  கண்ட ரொனால்டோ அவற்றை எடுத்து மேஜையின் ஓரத்தில் கேமராவில் தெரியாத வண்ணம் வைத்தார். மேலும் அதற்கு பதிலாக ஒரு தண்ணீர் பாட்டிலை அனைவர் முன்னிலையிலும் தூக்கி காண்பித்து ‘தண்ணீர் குடியுங்கள்’ என்றார். இந்த வீடியோ நொடிப்பொழுதில் உலகம் முழுவதும் வைரலானது. உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் ஒருவர் கோகோ கோலாவை தூக்கி ஓரம் வைத்தது சாதாரண நிகழ்வல்ல. அதன் எதிரொலியாக அந்நிறுவனம் ரூ.29,337 கோடி இழப்பை சந்தித்துள்ளது.





  மார்க்கா என்ற நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ரொனோல்டாவின் செய்தியாளர் சந்திப்புக்கு முன்பும், பின்பும் கோகோ கோலா நிறுவன பங்குகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது. இரண்டு பாட்டில்களை நகர்த்தி வைத்த ஒரு சிறிய நிகழ்வு அந்நிறுவத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை இழக்கச் செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. ரொனோல்டாவில் செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு சந்தை மதிப்பு 242 பில்லியன் டாலராக இருந்த கோகோ கோலா, பாட்டிலை ஓரம் வைத்த நிகழ்வுக்கு பின் 238 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது மார்க்கா. செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு ஒரு ஷேர் மதிப்பு 56.10டாலராக இருந்தது. அடுத்த 30 நிமிடத்தில் ஷேரில் சரிவு ஏற்பட்டு 55 டாலருக்கும் கீழ் சென்றுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக கோகோ கோலா நிறுவனம் இதுவரை எந்தக்கருத்தையும் தெரிவிக்கவில்லை.


ஐசிசி தடைக்கு பயந்து விளையாடாத அஸ்வின்; பாகிஸ்தான் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு