பாலசந்தர் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரம். இரண்டரை மணி நேரத்தை நம்பி ஒப்படைக்கும் ரசிகர்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து திருப்திப்படுத்தும் வெகுசில இயக்குனர்களில் முக்கியமானவர். அழுக்குச் சட்டை போட்டவர்களை காதல் மன்னனாகவும், ஜெமினிகளை ஓ... போட வைத்தும், வசூல் ராஜாக்களை சீனா தானாவுக்கு ஆட வைத்தும் தியேட்டர்களை ஆர்ப்பரிக்க வைத்த அக்மார்க் எண்டர்டெயினர். இந்த புகழுக்கெல்லாம் சொந்தக்காரரான இயக்குனர் சரணின் 55வது பிறந்த நாள் இன்று. காதல் மன்னனாக இருந்த தல அஜித்தை ஆக்ஷன் அல்டிமேட் ஸ்டாராக மாற்றியவர்.  நல்ல கார்ட்டுனீஸ்ட், ஓவியர். அதை கடந்து நல்ல இயக்குனர். 




இயக்குனர் ஆசைக்கு அடித்தளம் போட்ட குடை!


பெரும்பாலான இயக்குனர்கள் சொல்வது தான், ‛ சிறுவயதிலிருந்தே இயக்குனராக வேண்டும்,’ என்கிற ஆசை அது. சரணுக்கு அந்த ஆசை உண்டு. ஆனால் அது 5 வயதிலிருந்து வந்த ஆசை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோர் வீட்டிலும் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் போது, ‛ரஜினி படத்திற்கு போவோம்... கமல் படத்திற்கு போவோம்...’ என ஹீரோக்களை அடையாளப்படுத்தி அழைத்துச் செல்லும் போது, ‛பாலசந்தர் படத்துக்கு போவோம்... ஸ்ரீதர் படத்திற்கு போவோம்...’ என , இயக்குனர்களை காட்டி தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார் சரணின் அம்மா. அதுவே அவருக்கு டைரக்டர் தான் கெத்து என்பதைப் போல் மனதில் பதிந்து, டைரக்டர் ஆசை குடியேற காரணமானது. பொள்ளாச்சியில் ஒரு முறை ஸ்ரீபிரியா நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, அதை பார்க்கச் சென்ற சரணிடம், அப்படத்தின் இயக்குனருக்கு குடை பிடிக்க கூறியுள்ளனர். அவரும் ஆசையாய்அதை ஏற்றுள்ளார். அப்போது, டைக்டருக்கு கிடைத்த மரியாதையும், அவரின் பணிகளும் சரணை ஈர்த்துள்ளது. இப்படி தான் சரண் என்கிற இயக்குனர், துளிர் விடத்துவங்கினார். 




கையில் எடுத்த கார்ட்டூன் விடு தூது !


இப்போது வளர்ந்தாகிவிட்டது. பாலசந்திரடம் சேர வேண்டும். ஏதேதோ வழிகளை பிடித்து கவிதாலயாவில் அப்பாய்ன்மெண்ட் வாங்கியாச்சு. பாலசந்தரும் வந்தாச்சு. இருவரும் பரஸ்பரம் விசாரித்த பின், ‛தம்பி... இப்போது கமல் படம், உன்னால் முடியும் தம்பி ஸ்டார்ட் பண்ணப்போறேன், பெரிய ஸ்டார் படம். இப்போ சேர்க்கிறது கஷ்டம். அதுவரை என் மகனுடன் பணியாற்றுகிறாயா....’ என கேட்டுள்ளார் பாலசந்தர். உங்களுடன் தான் பணியாற்ற வேண்டும் என அடம்பிடித்துள்ளார் சரண். விகடனில் ப்ரீலான்ஸர் கார்ட்டூனிஸ்டாக பணியாற்றிய சமயம் அது. வித்தியாசமான கார்ட்டூன்களை கொண்டு பாலசந்தருக்கு கடித வழி தூதுகளை அனுப்ப துவங்கினார். ஒரு கட்டத்தில் அதுவும் ஒர்க் அவுட் ஆனது. பிற இயக்குனர்களை போல அல்ல பாலசந்தர். மூன்று பேருக்கு மேல் உதவி இயக்குனர்களை வைத்துக் கொள்ளமாட்டார். ஒருவர் புறப்பட்டால் தான், மற்றவருக்கு வாய்ப்பு. அப்படியொரு வாய்ப்பு வர, அதை சரணுக்கு வழங்குகிறார் பாலசந்தர். புதுப்புது அர்த்தங்கள் புராஜெக்ட் துவங்கியது. சரண், அதில் உதவி இயக்குனர். 1989ல் இருந்து 1996 கல்கி வரை அவரிடம் பணியாற்றி அனுபவத்தை பெற்றார். 




பாலசந்தரிடம் உண்மையை மறைத்த சரண்!


ஏற்கனவே சொன்னது போல தான், பாலசந்தரிடத்தில் 3 உதவி இயக்குனர்கள் இருந்தார்கள் என்றால், அவர்களில் முதலிடம் முதல் மூன்றாம் இடம் வரை  தர வரிசை இருக்கும். முதல் இடம் நகர்ந்தால் மற்றவர்கள் தானாக மேலே முன்னேறுவார்கள். கல்கி துவங்கும் போது, அப்படியொரு வாய்ப்பு சரணுக்கு வருகிறது. மூன்றாம் இடத்தில் இருந்து, இரண்டாம் இடத்திற்கு வந்தவருக்கு, முதல் இடத்திற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது தான் முதல் படமான காதல் மன்னன் வாய்ப்பு வருகிறது. பாலசந்தரின் படத்தை முழுமையாக கையாளும் வாய்ப்பு கிடைக்கும் போது, முதல் படம் வருகிறதே என தவிக்கிறார். வாய்ப்பு குறித்து பாலசந்தருக்கு தெரிவிக்காமல், கல்கியில் மூழ்குகிறார். படம் முழுமையாக முடிந்த பிறகு பாலசந்தர் வீட்டிற்கு சென்று, விபரத்தை கூறுகிறார். ஆனால், அதற்கு முன்பே பாலசந்தருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ‛ஆமாம் தெரியுமே...’ எனக்கூறியுள்ளார். சரணுக்கு ஷாக். வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‛பார்த்தீங்களா... வாய்ப்பு கிடைச்சிடுச்சுனு ஓடாம... கொடுத்த வேலையை முழுசா முடிச்சுட்டு வந்து சொல்றான்...’ என அனைவரிடத்திலும் சரணை புகழ்ந்துள்ளார் பாலசந்தர். நெகிழ்ந்து போன சரண், ‛சார்... ஏதோ முதல் படம் பண்ணப்போறேன்... நல்லா வந்தா சரி... சரியா வரலைன்னா... உங்கட்ட தான் வருவேன்னு,’ சொல்லிருக்கார். ‛அதெல்லாம் கவலைப்படாத... நல்லா வரும்,’ என வாழ்த்தி அனுப்பியிருக்கிறார் பாலசந்தர். 




பிரபு தேவா நடிக்கவிருந்த காதல் மன்னன்... அஜித்தை அறிமுகம் செய்த விவேக்!


கதையெல்லாம் கையில் இருந்ததால், முதலில் கலைப்புலி தாணுவை சந்திக்க சென்றுள்ளார் சரண். அப்போது பிரபுதேவாவுக்கு நல்ல ஓப்பனிங் இருந்த டைம். தாணு, பிரபுதேவாவை பரிந்துரைக்கிறார். ஆனாலும் அதற்கு காலமும் அவருக்கு தேவைப்பட்டது. சரண் மைண்டில் பிரபுதேவா இல்லை. ஆசை, காதல்கோட்டை வந்த போது அஜித் மீது சரணுக்கு ஒருவித ஈர்ப்பு இருந்திருக்கிறது. தனது கதைக்கும் அஜித் தான் சரியாக இருப்பார் என தீர்மானித்திருந்தார். ஆனால் அவரை எப்படி அப்ரோச் செய்வது என்கிற கேள்வி இருந்தது. புதுப்புது அர்த்தங்களில் பணியாற்றிய போது, விவேக் நட்பு கிடைத்திருந்தது. இருவரும் நெருங்கிய நண்பர்கள். மைனர் மாப்பிள்ளை படத்தில் அஜித்துடன் விவேக் நடித்திருந்தார். விவேக்கிடத்தில் விசயத்தை சொல்கிறார். அப்போது மந்தைவெளியில் இருந்த அஜித் வீட்டிற்கு இருவரும் புறப்படுகிறார்கள். அவரது தாய் டீ கொடுக்கிறார். தூங்கி எழுந்த முகத்தோடு, கண்ணை கசக்கிக்கொண்டு வருகிறார் அஜித். அறிமுகம் செய்து கொள்கிறார்கள். ‛தாராளமா பண்ணலாம்... ஆனால் 6 படங்கள் இருக்கு.. முடிச்சிட்டு வர்றேன்...’ என கூறியுள்ளார் அஜித். ‛சரி சார்... கதை கேளுங்கள்...’ என சரண் கூறியுள்ளார். ‛எதுக்கு... பாலசந்தர் சாரிடம் இருந்து வந்துருக்கீங்க... கதை இல்லாமலா வருவீங்க... முதல் படம் பண்ணப்போறோம்னு வெறி இருக்கும்... நீங்களே பண்ணுங்க,’ என அஜித் வெள்ளைக் கொடி காட்ட, ஒரு இயக்குனர் உருவாகினார். கல்கி முடித்து வரவும், காதல் மன்னம் துவங்கவும் நேரம் சரியாக இருந்தது. சரண் சமரசமாகியிருந்தால், பிரபு தேவா காதல் மன்னன் ஆகியிருப்பார். 


காதலில் விழுந்தவர்கள் கடக்க முடியாத சரணின் டாப் 5 சாங்ஸ்!




ஆசை நாயகனை ஆக்ஷன் நாயகனாக மாற்றிய அமர்க்களம்!


காதல் மன்னன் ஓகே ஆனதுமே. வெங்கடேஸ்வராலயம் என்கிற தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறாங்க. அவங்களை போய் பாருங்க என கூறிய அஜித், அவர்களுக்கு போன் செய்து, ‛டைரக்டர் வர்றார்... பேசிக்கோங்க...’ என கூறியுள்ளார். முதன் முதலில் தன்னை டைரக்டர் என அழைத்தது அஜித் என்பதில், சரணுக்கு நெகிழ்ச்சி. அஜித் வீட்டுக்கு உள்ளே வரும் போது வாய்ப்பு தேடிய உதவி இயக்குனர். வெளியே வரும் போது, இயக்குனர். அதன் பின் சரண் செய்த சரவெடி தான் உலகுக்கே தெரியுமே. சரணினன் பணியை பார்த்து, 1992ல் கவிஞர் வைரமுத்து அவரிடம் பேசியுள்ளார். ‛நல்லா வேலை பாக்குறீங்க... தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்துட்டுமா...’ என்று கேட்டுள்ளார். ‛சார்... எனக்கு இப்போ அனுபவம் கிடைச்சிருக்கு. கிடைச்ச அனுபவத்தை அதை கொடுத்தவருக்கு பயன்படுத்தனும், அதுக்கு அப்புறம் படம் பண்றேன்,’ என, கூறி, கிடைத்ததை ஏற்காமல், பிடித்ததை செய்வதில் ஆர்வம் காட்டியவர் சரண். ‛மற்றவர்களை போல எனக்கு பெரிய சிரமம் எல்லாம் இல்லாமல் முதல் வாய்ப்பு கிடைத்தது... ஆனால் அதை ஏற்பதில் தான் எனக்கு சவால் நிறைய இருந்தது,’ என சரண் பேட்டி ஒன்றில் கூறியிருப்பார். அது தான் உண்மையும் கூட. 1998 ல் காதல் மன்னன் சூப்பர், டூப்பர் ஹிட். அதுவரை தொடர்ந்து நாலைந்து படங்கள் அஜித்திற்கு பிளாப் ஆகியிருந்தது. காதல் மன்னன் வெற்றியை தொடர்ந்து சரண்-அஜித்-பரத்வாஜ் கூட்டணி அடுத்த ஆண்டே அமர்க்களம் படத்தில் இணைகிறது. அது வரை ஆசை நாயகனாக இருந்த அஜித், லக்கி ஸ்டார் அஜித் என மாறுகிறார். காதல் மன்னன் அஜித்... அமர்க்களம் படத்திலிருந்து ஆக்ஷன் நாயகனாக தன்னை அப்கிரேடு செய்கிறார். அந்த படத்தின் வெற்றிக்கு பின், தமிழ் சினிமாவில் தனி ஒரு பார்மெட்டை சரண் தனக்கென உருவாக்கினார். அது, ‛நம்பி வரும் ரசிகர்களை  குஷிப்படுத்தி அனுப்ப வேண்டும்,’ என்பது. 




இன்று வரை ‛அட்டேட்’ இயக்குனர் சரண்!


முதல் படமான காதல் மன்னன் முடிந்த பிறகு, வினியோகஸ்தர்களுக்காக 98 முறை திரையிட்டும் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை. 99 வது முறை தான் திருப்தி ஆகி, ‛சரி வாங்குவோம்...’ என வாங்கியிருக்கிறார்கள். 99வது முறை வாங்கிய அந்த படம் தான் 100 நாட்களை கடந்து அனைவருக்கும் லாபத்தை கொட்டித்தந்தது. அதன் பின் பார்த்தேன் ரசித்தேன், அல்லி அர்ஜூனா, ஜெமினி, ஜெஜெ, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., என டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆனார் சரண். அனைத்துமே பேய் ஹிட். அதிலும் ஜெமினி... ஒரு தலைமுறையையே ‛ஓ....’ போட வைத்து குதூகலப்படுத்தியது. அந்த வெற்றி, தெலுங்கில் வெங்கடேஷை வைத்து ஜெமினி எடுக்கும் அளவிற்கு அண்டை மாநிலத்திற்கும் அவரை அழைத்துச் சென்றது. உலக நாயகனின் வசூல் ராஜாவும் ‛சீனா தான...’ போட்டு அதகளம் பண்ணிய படம் . 5 ஆண்டுகளுக்குப் பின் அஜித்-சரண்-பரத்வாஜ் கூட்டணி மீண்டும் இணைந்து, அட்டகாசம் படத்தை தந்து, அதுவும் ஹிட். அஜித்தின் ஆதர்ஸ இயக்குனரானார் சரண். இதயத்திருடன், வட்டாரம், மோதி விளையாடு போன்ற படங்களில் அடுத்தடுத்து பணியாற்றினாலும், அஜித்தின் ஆலோசகராக தொடர்ந்தார் சரண். பின் 6 ஆண்டுகள் கழித்து அஜித்-சரண்-பரத்வாஜ் கூட்டணி அசல் என்கிற படத்தை எடுத்தது. சிவாஜி புரெக்டஷனின் அந்த படம் வசூல் வெற்றியை பெற்றது. அதன் பிறகும் 2019 வரை மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., படம் மூலம் தன்னை தமிழ் சினிமாவின் அப்டேட் இயக்குனராக இன்றும் ரேஸில் வைத்துள்ளார் சரண். இயக்குனராக மட்டும் இல்லாமல், ஆறு, வட்டாரம், முனி, ஆயிரத்தில் இருவர் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். 




டிக்கெட் வாங்குபவர்களின் இயக்குனர்!


தமிழ் சினிமாவில் நிறைய அறிமுகங்களை அறிமுகம் செய்தவர். படத்தில் இசைக்கு முக்கியத்துவம் தருபவர். ஹீரோயின்களை செதுக்குபவர் என பல சிறப்புகள் சரணுக்கு உண்டு. அதே நேரத்தில், ஹீரோக்களுக்கான இயக்குனராகவும் இருந்திருக்கிறார். தனது 5 வயது ஆசையை நிறைவேற்றிய கெத்து ஒருபுறம், இவர் படத்திற்கு நம்பி போகலாம் என்கிற நம்பிக்கை ஒருபுறம் என தன் சினிமா வாழ்க்கையை இன்றும் தனக்கான பாணியில் கடந்து கொண்டிருப்பவர். 1966 ஜூன் 16ல் பிறந்த சரண், இன்று 55 வது பிறந்தநாள் காண்கிறார். இன்னும் பல ஆண்டுகள் அவர் பணி தொடர வாழ்த்துக்கிறது ABP நாடு!