நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தொடக்க மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற பின் பெரும் பூரிப்பில் இருந்த மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கனவு போல் இருப்பதாக கூறினார்.


கனவுபோல் உள்ளது


நேற்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், MI முதலில் டெல்லி கேப்பிடல்ஸை ஒன்பது விக்கெட்டுக்கு 131 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பின், தொடர்ந்து ஆடி மூன்றே விக்கெட்டுகள் இழந்து, மூன்று பந்துகள் மீதமுள்ள நிலையில், ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பெருமைமிகு வெற்றியைப் பதிவு செய்தது.


"இது ஒரு சிறந்த அனுபவம், நாங்கள் பல ஆண்டுகளாக இதற்காக காத்திருந்தோம். இதை டிரஸ்ஸிங் ரூம் முழுவதும் அனைவரும் ரசித்தனர். இங்குள்ள அனைவருக்கும் இது ஒரு கனவு போல் உள்ளது,” என்று ஹர்மன்ப்ரீத் போட்டிக்கு பிந்தைய பெட்டியின்போது கூறினார். "WPL எப்போது வரும் என்று பலர் கேட்டார்கள், அந்த நாள் வந்துவிட்டது, நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறோம்," என்றார். 


MI நான்காவது ஓவரில் 2 விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்திருந்தபோது, வெற்றிக்கான 132 ரன்களைத் துரத்துவது கடினமாக இருக்குமோ என்று நினைக்க வைத்தது. ஆனால் அதிரடி ஆல் ரவுண்டர் நாட் ஸ்கிவர்-பிரண்ட் 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் மும்பை அணியை கோப்பையை நோக்கி அழைத்துச் சென்றார். 



ஹர்மன்ப்ரீத் கவுர்


"நீண்ட பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பதால், கடைசி வரை சென்றால் வெற்றி என்று நினைத்தேன். அனைவரும் பங்காற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. ஆட்டத்தில் பாசிட்டிவாக இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். தொடர் முழுவதும் எல்லா டாஸ்களும் எங்களுக்குச் சாதகமாகச் சென்றதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம்,” என்று கவுர் கூறினார்.


"இது நம் அனைவருக்கும் ஒரு சிறப்பான தருணம், இதற்காக நான் நீண்ட காலமாக காத்திருந்தேன், இன்று நான் வெற்றி பெறுவது எப்படி இருக்கிறது என்பதை அறிவேன். நாங்கள் நேர்மறையாக இருப்பதைப் பற்றி தொடர்ந்து பேசுகிறோம், எங்கள் திட்டங்களை நாங்கள் சிறப்பாக செயல்படுத்தினோம், அதனால்தான் நான் இன்று இங்கு நிற்கிறோம்," என்றார்.


தொடர்புடைய செய்திகள்: Budget: இரண்டு நாட்களுக்குப் பிறகு கூடும் சட்டமன்றம்; மாநகராட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் சென்னை மேயர்! இன்றைய அதிரடி நிகழ்வுகள்!


மெக் லானிங்


DC கேப்டன் மெக் லானிங் தனது அணி போதுமான அளவு செயல்படவில்லை என்று ஒப்புக்கொண்டார், "நாங்கள் வெற்றி பெற விரும்பினோம், ஆனால் மும்பை சிறப்பாக ஆட்டத்தை கையாண்டார்கள். அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள், ஆனால் எங்கள் குழுவின் முயற்சிகளுக்கும் முழுப் பெருமையும் உண்டு. நாங்கள் சிறந்த முறையில் பேட் செய்யவில்லை, ஆனால் இந்தப் போட்டியை இறுதிவரை தொடர முடியும் என்பதை எங்கள் பந்துவீச்சு காட்டியது,” என்று லானிங் கூறினார்.


மேலும், “பௌலர்களின் நன்றாக முயற்சி செய்தனர். முதல் 10 ஓவர்களில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம், ஆரம்ப விக்கெட்டுகளைப் பெற்றோம், ஆனால் ஹர்மன்ப்ரீத் மற்றும் ஸ்கிவர்-பிரண்ட் ஆட்டத்தை எடுத்துச் சென்றனர், அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். ஆட்ட நாயகன் விருது பெற்ற நாட் ஸ்கிவர்-பிரண்ட், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற விதம் மிகவும் சிறப்பு," என்றார்.



ஹேலி மேத்யூஸ்


271 ரன்களை குவித்து 16 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக மிகவும் மதிப்புமிக்க வீரராக பெயரிடப்பட்ட மற்றொரு MI வீரர் ஹேலி மேத்யூஸ், பேட்டிங் மற்றும் பந்து இரண்டிலும் அணிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். மேலும் பேசிய அவர், "அழுத்தம் அதிகமாக இருந்தபோது அதனை ஹேண்டில் செய்ய முடிந்தது மகிழ்ச்சி. நான் மிகவும் கடினமாக இருக்க முயற்சித்தேன், ஹர்மனும் மெலியும் என் அழுத்தத்தை குறைத்தனர். நான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தால் வெற்றியை கடந்து செல்வோம் என்று எனக்குத் தெரியும்," என்று கூறினார்.


மேலும் பேசிய அவர், "இறுதி 3-4 ஓவர்களில் நாங்கள் கொஞ்சம் சோதப்பினோம், ஆனால் அதுதான் விளையாட்டை சுவாரஸ்யமாக்கியது. கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி போன்ற ஒரு சிறப்பு குழுவுடன் ஒன்றிணைவது, உண்மையிலேயே சிறப்பான தருணம். நான் தொடர்ந்து எனது ஆட்டத்தை மேம்படுத்த முயற்சிக்கிறேன். இந்திய நிலைமைகள் எனது ஆஃப் ஸ்பின்னுக்கு உதவுகின்றன. இதே விருதை திரும்பப் பெறுவது முக்கியம், ஆனால் மும்பை இந்தியன்ஸுடன் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார்.