இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நாளை தொடங்குகிறது


இந்நிலையில் எப்போதும் போட்டிக்கு முன்பாக இந்திய கேப்டன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் முன்பாக இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் இம்முறை இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து, இன்று மாலை 3.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த விராட், “நான் முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.






இதனால், கேப் டவுனில் நாளை நடக்க இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி பங்கேற்பார் என்பது உறுதியாகி உள்ளது. விராட் கோலி கடந்த போட்டியில் களமிறங்காததால் நாளை தன்னுடைய 99 டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். அவருடைய 100ஆவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.  தொடர்ந்து பேசிய விராட், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் பங்கேற்க மாட்டார் என்பதையும் உறுதிப்படுத்தினார். காயம் காரணமாக அவர் அடுத்து டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 






வீடியோவைக் காண: Ind vs SA Test Match: கேப்டவுன் மைதானத்தில் இந்திய அணியின் செயல்பாடுகள் என்னென்ன?


இதுவரை கேப்டவுனில் விளையாடியுள்ள 5 போட்டிகளில்  இந்திய அணி 3ல் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கேப்டவுன் மைதானத்தில் இந்திய டெஸ்ட் போட்டியை இதுவரை வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரை சமன் செய்துள்ளன. நாளை தொடங்க இருக்கும் போட்டி தொடரை வெல்லப்போகும் அணி எது என்பதை தீர்மாணிக்கும்.


கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்ரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே, கடைசி டெஸ்ட் போட்டியை வென்று விராட் கோலி தலைமையிலான அணி வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.