இங்கிலாந்தில் தல தோனியும் சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தை சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அதை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார் ரெய்னா.


இதோ அந்தப் புகைப்படம்:






தோனி, ரெய்னா உறவு:


தோனி மீது அதீத அன்பும் மரியாதையும் கொண்டவர் சுரேஷ் ரெய்னா. தோனி தலைமையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த நாளில் ரெய்னாவும் சிறிது நேரத்திலேயே தன் சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்து தோனியை நெகிழ்ச்சியடைய வைத்தார்


2022 ஐபிஎல் ஏலத்தில் ரெய்னா எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை. அப்போது ரெய்னாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், "அடுத்த சீசனில் தோனி பாய் விளையாடவில்லை என்றால், நானும் விளையாட மாட்டேன். நாங்கள் 2008ல் இருந்து விளையாடி வருகிறோம் (CSKக்காக)… இந்த ஆண்டு நாங்கள் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டும் விளையாட அவரை சம்மதிக்க வைப்பேன்…“என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். அவர் விளையாட மாட்டார் என்றால், நான் எந்த ஐபிஎல் அணிக்காகவும் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை" என்று ரெய்னா கூறியிருப்பார். அந்த அளவுக்கு அவர் தோனி பிரியர். இடையில் சில சலசலப்புகளும் இருந்தன. இந்நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தல தோனி ரசிகர்களாலும், சின்னத்தல சுரேஷ் ரெய்னா ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறது.


இங்கிலாந்து-இந்தியா போட்டி:
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்  தொடங்கியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 103 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 43 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 55 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளில் டையில் முடிவடைந்துள்ளன. 


லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அவற்றில் 5 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. 


இங்கிலாந்து நாட்டில் இந்திய அணி தற்போது வரை 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் இங்கிலாந்து அணி 22 போட்டிகளிலும், இந்தியா 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிவடைந்துள்ளது.  2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணிக்கு சரியான வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு ஒருநாள் தொடரும் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.