தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. கேப்டன் கேல.எல்.ராகுல் 50 ரன்களும், ரவிச்சந்திரன் அஷ்வின் 46 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் சரியாக விளையாட வில்லை இதனால் இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 


இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸின் போது இந்திய வீரர் முகமது சிராஜ் பந்துவீசும் போது திடீரென பாதியில் நிறுத்தினார். அதன்பின்னர் இந்திய அணியின் பிசியோதெர்பிஸ்ட் நிதின் பட்டேல் வந்து களத்தில் சிராஜின் காயத்தை பார்த்துவிட்டு பின்னர் அவரை களத்தில் இருந்து அழைத்து சென்றுவிட்டார்.






நேற்றைய நாள் போட்டியின் முடிவில் இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்,”சிராஜ் உடைய காயம் சிறிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். காயம் ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் அவரை ஆய்வு செய்த பிறகு அணியின் மருத்துவர் உரிய முடிவை எடுப்பார். அவர் மீண்டும் களத்திற்கு வந்து இந்தியாவிற்காக சிறப்பாக பந்துவீசுவார்என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


முன்னதாக நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக விலகினர். இது தொடர்பாக பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டாஸ் முடிந்த பிறகு பதிவிட்டிருந்தது. அதில்,”இன்று காலை இந்திய கேப்டன் விராட் கோலிக்கு முதுகில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருடைய காயத்தை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனப் பதிவிட்டிருந்தது. 






ஏற்கெனவே கேப்டன் விராட் கோலி இல்லாதது அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது சிராஜ் உடைய காயமும் இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. எனினுன் இன்றைய போட்டிக்கு முன்பாக அவருடைய காயத்தை பார்த்த பிறகு அவர் மீண்டும் விளையாடுவாரா என்பது தெரியவரும். 


மேலும் படிக்க: இந்தியாவை சுருட்டிய அந்த மூவர் கூட்டணி யார்?