சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகிய இருவரும் கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் ஆவர்.  சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாராவை விட 4 வயது குறைந்தவர் தான். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் லாரா அறிமுகமாவதற்கு ஓராண்டு முன்பே சச்சின் டெண்டுல்கர் அறிமுகமாகிவிட்டார். முதன்முதலாக 1990ம் ஆண்டில் டொரான்டோவில் நடைபெற்ற காட்சி கிரிக்கெட் ஆட்டத்தில் முதல்முறையாக இந்த இரண்டு ஜாம்பவான்களும் சந்தித்துக் கொண்டனர்.


இவர்கள் இருவரும் பிரபல  ஆங்கில ஊடக நிறுவனத்தின் மாநாட்டில் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்று டெண்டுல்கர் கூறியதாவது:


டொரான்டோவில் முதல்முறையாக லாராவை சந்தித்தேன். நான் டெஸ்ட் ஆட்டத்தில் எனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவு செய்த பின்னர் நடைபெற்ற காட்சி ஆட்டம் அது. வெஸ்ட் இண்டீஸுடன் பிற அணிகள் மோதின. நான் அவரை முதன்முறையாக ஹோட்டல் லாபியில் பார்த்தேன். நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டபோதே நல்ல நட்பு பாராட்டினோம். எங்கள் அணிக்காக விளையாடியவர்களில் மிகவும் இளையவராக நாங்கள் தான் இருந்தோம். அம்ப்ரோஸ், வால்ஷ் போன்ற பிற வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களை விட லாராவுடனான எனது நட்பு சிறப்பாக இருந்தது.


எங்களுக்கு இடையிலான நட்பு மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல்,  லாராவுடனான எனது முதல் அனுபவமே சிறப்பாக இருந்தது. அவர் விளையாடும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். அவரது கைகள் கடவுளின் பரிசு என்று தான் கூறுவேன் என்றார் சச்சின் டெண்டுல்கர். இந்த மாநாட்டில் லாராவும் சச்சினை புகழ்ந்து தள்ளினார்.


லாரா பேசியதாவது: 
சச்சினை நான் பார்த்தபோது அவர் ஏற்கனவே சிறப்பாக விளையாடக்கூடிய இளைஞராக இருந்தார். அந்த காலகட்டத்தில் நான் அதிக ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடிக் கொண்டிருந்தேன். சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளக்கூடிய இந்திய பேட்ஸ்மேனாகவே நான் சச்சினை பார்த்தேன்.
சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொள்வார்கள்.


ஆனால், அத்தகைய சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட வீரராக சச்சினை பார்த்தேன்.  எனது சாதனைகளை நெருங்கி வந்த வீரராகே அவர் அப்போது இருந்தார். அவருடன் ஒப்பிட்டு என்னை நான் சரிபார்த்துக் கொள்வேன் என்றார் லாரா.


கிட்டத்தட்ட 1100 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் லாராவும், சச்சினும் விளையாடியுள்ளனர். நேருக்கு நேர் 45 ஆட்டங்களில் இருவரும் விளையாடி இருக்கின்றனர். இரண்டு ஜாம்பவான்களும் சர்வதேச கிரிக்கெட்டில் 56,715 ரன்களை குவித்துள்ளனர்.


இதனிடையே, உலகக் கோப்பை டி20 தொடரில் நாளைய ஆட்டத்தில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும் மோதுகின்றன. எட்டாவது டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவும், நியூசிலாந்து தோல்வி அடைந்து வெளியேறின. இதையடுத்து, பாகிஸ்தானும், இங்கிலாந்தும் பைனலுக்கு முன்னேறியுள்ளன.


ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம்… இந்திய அணி தோல்வி குறித்து சச்சின் பதிவிட்ட நச் ட்வீட்..


பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதும் இந்த ஆட்டம் மெல்போர்ன் நகரில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஏறக்குறைய 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் அரங்கேறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.