இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது என மதுரையில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி

 நடராஜன்


இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது பந்துவீச்சால் பல ரசிகர்களை தக்கவைத்துள்ளார். யார்க்கர் போடுவதில் சிறந்து விளங்கும் நடராஜன், ஐ.பி.எல் போட்டியில் கலக்கினார். ஆனால் உலக கோப்பை போட்டி மற்றும் ஜிம்பாவே போட்டிகளில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் தான் உருவாக்கிய கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ந்து பல வீரர்களையும் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் மதுரை வந்த நடராஜன் ”இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது” என பேட்டியளித்துள்ளார்.
 

மதுரையில் கிரிக்கெட் வீரர் நடராஜன் 



 

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது. காயங்கள் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. கிரிக்கெட்டில் அரசியல் எதும் நடைபெறவில்லை. கிரிக்கெட் வாரியம் வீரர்களிடம் எந்தவொரு ஏற்ற தாழ்வுகளையும் பார்ப்பதில்லை. கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்களின் ஒத்துழைப்பால் தான் நான் இந்திய கிரிக்கெட் அணியில் வீரராக உருவாகி உள்ளேன்.

 


 

ஐ.பி.எல். போல் டி.என்.பி.எல்

 

ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளேன். ஐ.பி.எல், கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ரசிகர்கள் அதிகம் பார்க்கும் கிரிக்கெட் போட்டியாக டி.என்.பி.எல் போட்டி மாறி உள்ளது. டி.என்.பி.எல் போட்டியில் தமிழகத்தில் இருந்து 15 கிரிக்கெட் வீரர்கள் உருவாகி உள்ளனர். டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. டி.என்.பி.ல் கிரிக்கெட் தொடக்கத்தை விட தற்போது முன்னேற்றம் அடைந்து உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இளைஞர்கள் கடின உழைப்பால் உயர்ந்த நிலைக்கு செல்லலாம், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்க்கு பெற்றோர்கள் ஊக்கம் அளிக்கிறார்கள். மீடியா முன் பேசுவதற்கு தயக்கமாக உள்ளது. பின்னர் எப்படி சினிமாவில் நடிப்பேன், சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை" என கூறினார்.