கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று கார்கிலில் வீரவணக்கம் செலுத்தினார்.

  


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்தது. அப்போது இந்திய வீரர்கள் அவர்களை எதிர்த்து போராடி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்தனர். 


இந்த வெற்றி மிகவும் பிரம்மாண்டமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வெற்றியின் 25வது ஆண்டு தினம் இன்று. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கார்கில் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்படுவது வழக்கம். 


கார்கிலில் உள்ள டிராஸ் பகுதியில் நேற்று முன் தினம் இருந்தே வெற்றிக்கொண்டாட்டம் தொடங்கி விட்டது. இந்நிலையில் இன்று காலை 9.20 மணியளவில் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்த பிரதமர் மோடி கார்கில் சென்றார். அங்கு வீரவணக்கம் செலுத்தினார். 






அப்போது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்த தேசம் தலைவணங்குகிறது. தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி ஒடுக்கப்படுவர். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொருவருவருக்கும் நாம் கடைமைப்பட்டிருக்கிறோம். இந்தியா மீதான தாக்குதல்களை மறைமுகமாக இன்றும் தொடர்கிறது பாகிஸ்தான். இன்னும் தனது தவறுகளிலிருந்து பாடம் கற்கவில்லை. பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். பயங்கரவாதத்தை தூண்டிவிடுபவர்களின் எண்ணம் ஒருபோதும் பழிக்காது. பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பின்னால் இருந்து இயக்கி வருகிறது” எனத் தெரிவித்தார். 


மேலும், ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 15,800 அடி உயரத்தில் மலைப்பகுதியில் கட்டப்படும் சுரங்கப்பாதை இதுதான். பணிகள் முடிந்துவிட்டால் உலகின் மிக உயரத்தில் கட்டப்படும் சுரங்கப்பாதை என்ற பெருமையை இது அடையும். இது ஆயுதப் படைகள் மற்றும் உபகரணங்களின் விரைவான மற்றும் திறமையான இயக்கத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், லடாக்கில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.


இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “ ஜூலை 26ஆம் தேதி ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் சிறப்பான நாள். 25வது கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடுவோம். நம் தேசத்தை காக்கும் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் நாள். கார்கில் போர் நினைவிடத்திற்கு சென்று நமது வீர வீராங்கனைகளுக்கு அஞ்சலி செலுத்துவேன். ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்திற்கான பணிகளும் தொடங்கப்படும். குறிப்பாக மோசமான வானிலையின் போது லடாக்கின் இணைப்பை மேம்படுத்த இந்தத் திட்டம் முக்கியமானது” எனத் தெரிவித்திருந்தார். 






இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லாஹவுல் பள்ளத்தாக்கையும், லடாக்கின் ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கையும் இணைக்கும் முக்கிய இணைப்பாக இந்த சுரங்கப்பாதை செயல்படும். தற்போது, ​​ஸ்ரீநகர்-ஜோஜிலா-கார்கில்-லே மற்றும் மணாலி-அடல் சுரங்கப்பாதை-சர்ச்சு-லே ஆகிய இரண்டு அச்சுகள் லேவிற்கு உள்ளன.