இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனும், கர்நாடக அணியின் கேப்டனுமான மயங்க் அகர்வால் விமானத்தில் ஏறிய உடனே உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து, அவர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் பிடிக்க போராடி வரும் கர்நாடக கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனுமான மயங்க் அகர்வால், புது டில்லிக்கு புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் உடல்நிலை சரியில்லாமல் அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மயங்கிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளனர். 


மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு எதிராக யாரோ சதித் திட்டம் தீட்டியதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. அது உண்மை என நிரூபிக்கும் வகையில், மயங்க் அகர்வாலுக்கு எதிராக சதி நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து காவல்துறையினர், தண்ணீர் என்று நினைத்து மயங்க் அகர்வால், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது இருக்கையில் வைக்கப்பட்டிருந்த பையில் இருந்த பானத்தை குடித்துள்ளார். இதை குடித்து முடித்ததும் அவரது வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் எரிச்சல் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, உடனடியாக மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


போலீசில் புகார்: 


இந்த சம்பவம் தொடர்பாக மயங்க் அகர்வால் தனது மேனேஜர் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், மேற்கு திரிபுரா காவல்துறை அதிகாரி கிரண் குமார் விளக்கமளித்தார். அதில், “மயங்க் அகர்வால் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர். இப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மயங்கின் மேனேஜர் விசாரிக்க எங்களிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், விமானத்தில் ஏறும்போது, மயங்க் அகர்வாலுக்கு முன்னால் ஒரு பை வைக்கப்பட்டு இருந்ததாகவும், கொஞ்சம் கொஞ்சமாக குடித்தபோது, எரிச்சல் ஏற்பட்டு அவர் அதை துப்பியதாகவும் தெரிவித்தார். அவரது வாயில் வீக்கம் மற்றும் புண்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 


இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை செயலர் கிரண் கிட்டே கூறுகையில், 'காவல்துறையினர் தங்கள் புகாரை பதிவு செய்துள்ளனர். இது குறித்து நாங்களும் விசாரணை நடத்துவோம். அவரது மேலாளர் கூறுகையில், அவர் நாளை பெங்களூரு செல்வார். இதற்கிடையில், அகர்தலாவில் அவருக்கு என்ன நல்ல சிகிச்சை கிடைக்கிறதோ அதை வழங்குவோம்.” என்றார்.


ஐ.எல்.எஸ் மருத்துவமனை சார்பில் மேலாளர் மனோஜ் குமார் தேப்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாயில் லேசான எரியும் உணர்வும், உதடுகள் வீக்கமும் ஏற்பட்டது. அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். 


மயங்க் அகர்வாலில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:


மயங்க் 2018 டிசம்பரில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். மயங்க் அகர்வால் இதுவரை இந்தியாவுக்காக இதுவரை 21 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 36 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி 41.33 சராசரியுடன் 4 சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் உள்பட 1488 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 243 ஆகும். இது தவிர, இவர் ஒருநாள் போட்டியில் 5 இன்னிங்ஸ்களில் 86 ரன்கள் எடுத்தார். இந்த காலகட்டத்தில் மயங்கால் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியவில்லை.