தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான நேற்று மழை காரணமாக முழு நாள் ஆட்டமும் தடைப்பட்டது. 


 


இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி முதல் செஷனில் மழமழவென விக்கெட்களை இழந்தது. 272/3 என இருந்த இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டின் எல்கர் பும்ரா வீசிய முதல் ஓவரில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் இந்திய வீரர் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். எனினும் ஆட்டத்தின் 11ஆவது ஓவரை வீசும் போது கால் சறுக்கி கீழே விழுந்த பும்ரா களத்தில் இருந்து வெளியேறினார். 




அதன்பின்பு தேநீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தின் 60ஆவது ஓவரை அவர் திரும்பி வந்து வீசினார். அந்த சமயத்தில் அவர் பந்துவீச வருவதற்கு முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலி, “எங்களுடைய ராக் பந்துவீச வந்துவிட்டார்” என்று கூறியது ஸ்டெம்ப் மைக் வழியாக கேட்டது. இந்த சம்பவத்தை பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் பும்ராவை WWE சூப்பர் ஸ்டார் ராக் உடன் விராட் கோலி ஒப்பிட்டுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர்.






 






 






 






 






 






தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்தது. இறுதியில் முகமது ஷமியின் வேகத்தில் தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு சுருண்டது. முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பும்ரா மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. 


மேலும் படிக்க: தென்னாப்பிரிக்காவை பஞ்சர் செய்து சாதனை பட்டியலில் இணைந்த ஷமி- 197 ரன்களுக்கு ஆல் அவுட் !