நினைத்துக்கூடப்பார்க்க முடியாததை பாகிஸ்தான் செய்து முடித்துள்ளது. அது அவ்வளவுதான் என்றார்கள் ஏளனமாக... ஜிம்பாப்வே கைக்கொட்டி சிரித்தது, பைரா பியர் குடித்து கொண்டாடினார்கள். பிரதமரே மீம்ஸ் போட்டு கலாய்த்தார். மூன்று போட்டிகளை வென்றாலும் சான்ஸ் குறைவுதான் என்ற நிலையில், அனைத்து முரண்பாடுகளையும் மீறி, இரண்டு போட்டிகளை வெறிகொண்டு வென்று தென் ஆப்பிரிக்க போட்டிக்காக காத்திருந்தது.


நெதர்லாந்துடனான தோற்கப் போகிறார்கள் தென் ஆப்பிரிக்கா என்று நினைத்த நிலையில் நெற்றிப் பொட்டை குறி வைத்தார்கள் நெதர்லாந்து. அடுத்த உடனடி போட்டியில் வெல்பவர்கள் அரையிறுதி என்றாக, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, 2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அதிசயமாக தகுதி பெற்றது. கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு கம்பேக்கை மொத்த அணியும் சேர்ந்து கொடுத்திருக்கிறது.



அரையிறுதியில் பாக்.


128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 32 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக, வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது, வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரை சதம் அடித்து (48 பந்துகளில் 54) பங்களாதேஷ் அணிக்காக அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார்.


இந்தியாவுடனான தோல்வி மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான அதிர்ச்சி அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு, ஒரே ஒரு நூலிழை வாய்ப்புதான் பாகிஸ்தான் அணிக்கு இருந்தது. காயப்பட்ட சிங்கத்துடைய மூச்சு காற்றாக சீற, அந்த நூலிழையை பிடித்துக்கொண்டு முன்னேறி அரை இறுதிக்குள் புகுந்துள்ளனர். தற்போது புதன்கிழமை நியூசிலாந்தை எதிர்த்துப் அரையிறுதியில் விளையாடுகிறார்கள். 



மோசமான தொடக்கம்


உலகக்கோப்பை தொடங்குவதற்கு ​​முன்பாக பாகிஸ்தான் ஒரு பலமான அணி என்றும், சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதன் முதல் போட்டியில் இந்தியாவிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது, விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.


அடுத்த போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தானின் நிலை மோசமானது. சிக்கந்தர் ராசாவின் ஆல்ரவுண்ட் ஆட்டம் ஜிம்பாப்வே ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவியது, பாகிஸ்தான் 131 என்ற சாதாரண இலக்கை எட்ட முடியாமல் தோற்றது. அந்த நிலையில் பாகிஸ்தான் வெளியேறி விட்டது என்று பலரும் நினைத்தனர். ஏன் அவர்கள் அணி வீரர்களே அழும் வீடியோ வெளியாகி வைரலானது. ஆனால் அதன் பிறகு நடந்தவை மேஜிக்.


தொடர்புடைய செய்திகள்: T20 WC Semi-Finals: கதறவிட்ட நெதர்லாந்து.. மண்ணை கவ்விய தென்னாப்பிரிக்கா.. அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா..!


மீண்டு வந்த பாகிஸ்தான்


நெதர்லாந்து அணியை வென்று ஃபார்முக்கு வந்தது பாகிஸ்தான் அணி. 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து ட்ராக்கில் வந்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 39 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில், ஷதாப் கான் தனது ஃபார்மை வெளிப்படுத்தினார். முதலில் நெதர்லாந்து அணியை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 91 ரன்களுக்கு கட்டுப்படுத்த மூன்று விக்கெட் எடுத்து உதவினார். ஃபார்முக்கு திரும்பினாலும் அடுத்த போட்டி தென் ஆப்பிரிக்காவோடு.


அந்த கடினமான போட்டியில், பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறையில்) தோற்கடித்து அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து. ஷதாப் கானின் இரண்டு விக்கெட்டுக்கள் தென்னாப்பிரிக்காவை நிலைகுலைய செய்தது. ஆரம்பத்தில், பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது, ஷதாப்பும் தனது திறமையை பேட் மூலம் வெளிப்படுத்தினார். அவர் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். 



இந்தியாவிற்கு உண்மையான சவால்


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றியின் மூலம் குரூப் 2-இல் இழுபறி தோன்றியது. பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. ஆனால் இந்தியாவோ, தென் ஆப்பிரிக்காவோ தோற்றால் மட்டுமே பாகிஸ்தானுக்கு வாய்ப்பு உருவாகும் சூழல் இருந்தது. பெரும்பாலும் நெதர்லாந்திடம் தென் ஆப்பிரிக்கா தோற்க வாய்ப்பில்லை என்று இந்தியாவுக்கு ஜிம்பாப்வே அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என்றுதான் பார்த்தார்கள். ஆனால் அதற்கான தேவை இன்றி யாரும் எதிர்பாராத நிலையில், நெதர்லாந்து தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்து.


அப்படி இருக்கு பங்களதேஷ் போட்டி ஒரு காலிறுதி போட்டியாக மாறியது. அதில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாத்தியமே இல்லாத நிலையில் இருந்து அரையிறுதியில் இடம் பிடித்திருக்கும் பாகிஸ்தானை உலகம் வியந்து பார்க்கிறது. என்னதான் பாகிஸ்தான் இதற்காக முழுமையாக உழைத்திருந்தாலும், ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து நெதர்லாந்து அணிக்கு ஒரு கும்பிடு போட்டே ஆகவேண்டும், அதோடு சேர்த்து மழைக்கும். மழை இம்முறை பாகிஸ்தான் அணிக்கு சாதகமான நேரத்திலேயே வந்து காப்பாற்றி உள்ளது.


அதனால் எந்த பாதகமும் அந்த அணிக்கு ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணி மழைக்கு பிறகுதான் பாகிஸ்தானிடம் விக்கெட்களை விடத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் அவற்றை விட நூறு மடங்கு அதிக பங்கு பாகிஸ்தான் அணியினரின் உழைப்பில் இருக்கிறது. இப்படி ஒரு கம்பேக்கை கொடுத்த ஒட்டுமொத்த அணி நாம் சூப்பர் 12-இல் விளையாடிய பாகிஸ்தான் அணி அல்ல, 'இப்போ வாங்கடா' என்று வரிந்து கட்டி நிற்கும் முழுமையான வேறு அணி. இந்த பாகிஸ்தானை இறுதிப்போட்டியில் எதிர்கொள்வதுதான் இந்தியாவிற்கு உண்மையான சவால்!