2021 டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 12 சுற்று இன்று தொடங்க உள்ளது. ஸ்காட்லந்து, வங்கதேசம், இலங்கை அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெற்ற நிலையில், நான்காவது அணியாக தேர்ச்சி பெற்று கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது நமிபியா அணி. இம்முறை, ஸ்காட்லாந்து, நமிபியா என இரு அணிகள் முதல் முறையாக டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. 


அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது நமிபியா அணி.  கடந்த 2019-ம் ஆண்டு முதல் நமிபியா கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் முன்னாள் தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரரும், முன்னாள் சிஎஸ்கே அணி வீரருமான ஆல்பி மார்கல். 


நமிபியா அணியின் தலைமை பயிற்சியாளர் பியரி டி ப்ரூன், ஆல்பி மார்கலுடன் இணைந்து நமிபியாவின் உலகக்கோப்பை கனவுக்கு விதை போட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டுதான் நமிபியா கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் கிரிக்கெட் அணியாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. நமிபியா போன்ற கத்துக்குட்டி அணிக்கு இதுவே தொடக்கம். இனி, கிரிக்கெட் தளத்தில் மெதுவாக வளர்ச்சி காணும் என தெரிகிறது.  அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள நமிபியா அணி, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் இருக்கும் க்ரூப்:2-ல் இடம் பிடித்துள்ளது. கோப்பையை கைப்பற்றுவதைவிட, கிரிக்கெட்டின் முன்னணி அணிகளுடன் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விளையாடி அனுபவத்தை பெற்று செல்ல இருப்பதிலேயே நமிபியா வெற்றி கண்டுவிட்டது. 


சிஎஸ்கேவும், ஆல்பியும்:


2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆல்பி மார்கல், இத்தனை ஆண்டுகள் கடந்தும் சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆல்பி மார்கல் சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோது 2009, 2010 என இரண்டு முறை அடுத்தடுத்து சாம்பியனானது சிஎஸ்கே.






2021 ஐபில் சீசனின்போது, சிஎஸ்கேவின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்த ஆல்பி. சிஎஸ்கே கோப்பையை கைப்பற்றும் என முன்கூட்டியே கணித்திருந்தார். 










டி-20 உலகக்கோப்பையில் சிஎஸ்கே வீரர்கள்:


நடப்பு டி-20 உலகக்கோப்பையில் சிஎஸ்கேவைச் சேர்ந்த மூன்று முன்னாள் வீரர்களும், கேப்டன் தோனியும் அணி ஆலோகரகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் களமிறங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக தோனியும், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ஸ்டீபன் ப்ளெமிங்கும், நமிபியா கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக ஆல்பி மார்கலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோகராக மேத்யூ ஹைடனும் இந்த உலகக்கோப்பையில் பணியாற்ற உள்ளனர்.


Also Read: பாகிஸ்தானை எதிர்த்து தொடர்ந்து வெற்றி வேட்டை(T20) நடத்தும் இந்தியா : வரலாறு சொல்வது என்ன தெரியுமா?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண