இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான சூர்ய குமார் யாதவை மட்டும் மிஸ்டர் 360 என்று அழைக்காதீர்கள்; இஷான் கிஷனும் அப்படிதான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்தார்.


பங்களாதேஷின் சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி ஸ்டேடியத்தில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதத்துடன் பல சாதனைகளை முறியடித்ததன் மூலம் இந்திய இடது கை வீரர் இஷான் கிஷன், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்தவர், வேகமாக இரட்டை சதம் அடித்தவர் என்னும் பெருமைகளை பெற்றார்.


இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அஜய் ஜடேஜா பேசியதாவது: இந்த தலைமுறை வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். மைதானத்தில் நாலாபுறத்திலும் அடித்து ஆடுகின்றனர். இந்த தலைமுறை வீரர்கள் எல்லாருமே சிறப்பாக அடித்து விளையாடுகின்றனர். சூர்ய குமார் யாதவை மட்டும் மிஸ்டர் 360 என்ற அழைக்காதீர்கள்.


இஷான் கிஷனும் 360 டிகிரியில் அடித்து விளையாடக் கூடிய வீரர் தான். அதிரடியாக விளையாடினார். இரட்டை சதம் பதிவு செய்தார். நல்ல திறமை படைத்த வீரர்கள் அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்கிறார்களா என்றால் அது கேள்வியாக தான் இருக்கிறது.


15 ஓவர் எஞ்சியிருந்தது. நான் 300 ரன்கள் கூட எடுத்திருக்கலாம் என்று இஷான் கிஷன் கூறினார். சிறப்பாக யோசனை தான். ஆனால், அவர் விளையாடும்போதே இதை யோசித்திருக்க வேண்டும்.


நாங்கள் இஷான் கிஷனை முதல்முறையாக சந்திக்கும்போது நான் சிக்சர் அடிப்பேன் என்று கூறினார். அவர் விளையாட வந்து 10 ஆட்டங்கள்தான் ஆகிறது. ஆனால், தற்போது மிகவும் முதிர்ச்சியான வீரர் போல் பேசுகிறார் என்றார் அஜய் ஜடேஜா.


ஜிம்பாப்வேக்கு எதிராக 138 பந்துகளில் 20 ரன்களை எட்டிய மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த கிஷன், 126 பந்துகளில் தனது இரட்டை சதத்தை எட்டினார். 10 சிக்ஸர்கள் மற்றும் 24 பவுண்டரிகள் அடித்த இஷான் கிஷன், வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் ஓவரில் சிங்கிள் எடுத்து தனது வரலாற்று இரட்டை சதத்தை எடுத்தார்.


Sanju Samson: அயர்லாந்து அணிக்காக ஆடப்போகிறாரா சஞ்சு சாம்சன்..? நடந்தது இதுதான்...!


இரட்டை சதத்தை அடித்த உடன் இஷான் கிஷன் சிங்கிள் ஓடி முடிப்பதற்கு முன்பே விராட் கோலி கொண்டாட ஆரம்பித்தார். இந்திய அணி டக்அவுட் அவரது இரட்டை சதத்தை கொண்டாடிய விதத்தில் கிஷானின் சாதனை அளவை அறிய முடியும்.


காயம் அடைந்த ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் கே.எல். ராகுல் ஆகியோர் இஷான் கிஷான் மீது நம்பிக்கை வைத்து களமிறக்கிய போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியத்தில் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதிலும் அமைதியான ராகுல் டிராவிட் எழுந்து குதித்து கொண்டாடியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.