கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இது பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மூலம்,  2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று இருந்தது. ஆஷஸ் தொடரின் அடுத்த போட்டி வரும் 26ஆம் தேதி பாக்சிங் டே மெல்பேர்னில் தொடங்குகிறது. 


275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபாரா வெற்றி பெற்றதை, அந்நாட்டு வீரர்கள் கொண்டாடினர். போட்டி முடிந்த சில நிமிடங்களில் மைதானத்தில் இருந்த குழந்தைகளை நோக்கி ஓடினார் வார்னர். மைதானத்தில் இருந்த அவரது மூன்று குழந்தைகளை கட்டியணைத்து வெற்றியை கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. 


வழக்கமாக குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடும் வார்னர், க்யூட் புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். வார்னர், வார்னர் குடும்பத்தினருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விரைவில் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதால், இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி பெற்ற இரு வெற்றிகளுக்கு வார்னருக்கு ஸ்பெஷலாகவே அமைந்திருக்கும்.






இரண்டாவது டெஸ்ட் ரீவைண்ட்:


இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி 230 ரன்களுக்கு சுருண்டது. 


இதனால், 242 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன்காரணமாக இங்கிலாந்து அணிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. நான்காவது நாளன்று இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அப்போது தொடக்க முதலே இங்கிலாந்து அணி திணறியது. நான்காவது நாளின் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. 


அதனை அடுத்து, ஐந்தாவது நாளான்று இங்கிலாந்து அணி சற்று நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. எனினும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு அரணாக இருந்த ஜோஸ் பட்லரின் விக்கெட்டை ஹிட் விக்கெட் முறையில் இவர் வீழ்த்தினார். அவருடைய ஹிட் விக்கெட் ஆட்டத்தை மாற்றும் வகையில் அமைந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 


மேலும் படிக்க: வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: ஐந்தே நாட்களில் தங்க நகைகளை மீட்ட தமிழக காவல்துறை


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண