தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது.

Continues below advertisement

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.

Continues below advertisement

இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை காட்டியது உலக அதிசயமாக பர்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் ஆனது.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் ராஜராஜ சோழன் என்றால் மிகையில்லை.

இத்தகைய சிறப்புகள் ொண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் அக்.31,நவம்பர் 1 தேதிகளில் நடைபெற உள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூடிய நாளான ஐப்பசி சதய நாளை, ஆண்டுதோறும் சதய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு ராஜராஜ சோழனின் 1040 வது சதய விழா வரும் 31ம் தேதி காலை  தொடங்குகிறது.  அன்று மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவற்றைத் தொடர்ந்து,  பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். 

சதய விழா நாளான வரும் 1-ம் தேதி காலை மாமன்னன் ராஜராஜ  சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறைத் திருவீதி உலா, பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பிற்பகல் பெருந்தீப வழிபாடு, மங்கல இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 

இந்த சதய விழா முன்னிட்டு பெரிய கோயிலில் இன்று பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. இதில் பந்தக்காலுக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், திரவிய பொடி உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பந்தக்கால் நடப்பட்டது.

நிகழ்வில்  அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் து.செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி.மேத்தா, உறுப்பினர் ராமநாதன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ.கவிதா, வெற்றி தமிழர் பேரவை ரா.செழியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.