வைத்தீஸ்வரன்கோயில் நரி ஓட்ட திருவிழாவில் ஓட்டம் பிடித்த கோயில் யானை...!
வைத்தீஸ்வரன்கோயில் பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான நரி ஓட்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன்கோயில் பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான நரி ஓட்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வைத்தீஸ்வரன் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன்கோயிலில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
Just In





பக்தர்களின் நோய் தீர்க்கும் ஸ்தலம்
மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
ஆண்டு பிரமோற்சவ திருவிழா
இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு பிரமோற்ச்சவ திருவிழா ஏப்ரல் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இவ்விழாவின் போது அருள்மிகு வைத்தியநாத சுவாமியும், தையல்நாயகி அம்மனும் நாள்தோறும் வீதியுலா செல்வார்கள், அதனை தொடர்ந்து நாய் ஓட்டம் நரி ஓட்டம் எனும் யானை ஓடும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறும்.
அதிவேகமாக வந்த சென்னை வந்தே பாரத்.. தண்டவாளத்தில் சிக்கிய மாநகரப் பேருந்து! அடுத்தது நடந்தது என்ன?
நரி ஓட்ட வைபவம்
முருகபெருமானின் தந்தையாகிய வைத்தியநாதசுவாமியும், தாயாகிய தையல்நாயகி அம்மனும் தீர்த்த வாரிக்காக வீதியுலா செல்லும் போது ஆலயத்தில் தனியாக இருக்கும் முருக பெருமானுக்கு விளையாட்டு காட்டுவதற்காக யானை ஓடிவந்து, ஓடிவந்து வணங்கி விளையாடுவது ஐதீகம், பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளான பரிவாரங்களுடன் அம்பாள் சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சுவாமிகள் வீதியுலா செல்லும் வரை அமைதியாக நிற்க்கும் யானை, பின்னர் முருக பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் போது அதிவேகமாக ஓடி, ஓடி மீண்டும் திரும்பி ஓடிவந்து முருகபெருமானை வணங்கி விளையாடியது. நரி ஓட்ட வைபவம் என்று அழைக்கப்படும் யானை ஓடும் இக்காட்சியை வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் இன்றி மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள், வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் திரளானோர் கண்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர், அம்பாள், சுவாமி, சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வுகள்
தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான சரகோபுரம் வீதியுலா 6 -ம் தேதியும், 8 மற்றும் 9ஆம் தேதிகளில் திருத்தேரோட்டமும், 11 -ஆம் தேதி தீர்த்தவாரி, 13 -ஆம் தேதி காட்சி திருநாள், 14 ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.