மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த ஆலயம் பிப்பல மகரிஷிக்கு, இறைவன் விஸ்வரூப தரிசனத்தில்  காட்சி கொடுத்த இடமாகும். 




சனி கவசம் பாடப்பட்ட இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால், பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடிஹத்தி தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வூர் கோடிஹத்தி பாப விமோசன தலம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி கோழிகுத்தி என தற்போது அழைக்கப்படுகிறது. இத்தகைய புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. 




இதையொட்டி பரமபத வாசலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், மூலவர் வானமுட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.




திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் தங்க ரத்தின அங்கியில் எழுந்தருளினார். 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் ஆலயம். பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 -வதுமான இந்த ஆலயத்தில் ஏகாதேசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 




இதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு  ஆராதனைகளுக்குப்பின், பெருமாள் பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடினர். தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை அடுத்து பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு,  பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.




சீர்காழி ஸ்ரீ திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயிலில்  சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் பெருமாளை வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28 -வது ஸ்தலமான ஸ்ரீ திருவிக்கிரம நாராயணபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தாயாருடன் ரத்திண அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. 




அதனையடுத்து  சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அவ்வழியே ஸ்ரீ தேவி, பூ தேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியை இன்று மட்டுமே வணங்க முடியும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழாவில், இன்று அதிக அளவு பக்தர்களுடன் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து பெருமாளை சேவித்தனர்.