திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கியது. இதில் ஏளரமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்


Thiruparankundram: 'குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்' - என்பார்கள். முருகனின் முதல்படை வீடே பெரிய குன்றாக தான் இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம், மதுரை நகர் பகுதியில் இருந்து சற்று ஏறக்குறைய 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாண்டிய மன்னர்கள் காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட குடவரைக் கோயிலாக அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸ்தலமாக பார்க்கப்படக்கூடிய நிலையிலே மலையை குடைந்து கர்ப்ப கிரகம் வரை மலைப் பகுதிக்குள்ளேயே இருக்கக்கூடிய ஒரு கோயிலாக இந்த கோயில் இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன்  தொடக்கம். ஏளரமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
 

பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றதாகும்



ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுப்பிரமணிய சுவாமி முன்னிலையில் பங்குனி பெருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மா இலை, தர்ப்பைப்புல், பூ, குங்குமம் சந்தனம் கொண்டு தங்கம் முலாம் பூசப்பட்ட கொடி கம்பம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவினை ஒட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 

 

சூரசம்ஹார லீலை நடைபெறும்


 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 16ஆம் தேதி சூரசம்ஹார லீலை நடைபெறும். தொடர்ந்து 17ஆம் தேதி மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகமும், 18 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு மீனாட்சி அம்மன், சொக்கநாதர் பிரியாவிடை முன்னிலையில் பகல் 12 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19ஆம் தேதி காலை 6 மணி அளவில் கிரிவலம் வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள்  கோயில் துணை ஆணையர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.