மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 6-ம் நாளில் சுந்தரேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா - கோவிலுக்கு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெற்றது.


மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழா வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

 





இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம். இந்தாண்டு சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், மேயர் இந்திராணி உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.



 

 

இதனையடுத்து சித்திரைத் திருவிழா 6-வது நாள் நிகழ்வாக நேற்று இரவு மீனாட்சியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும்,  சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தங்கரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர். முன்னதாக கோயிலினுள் சிவகங்கை ராஜா மண்டபத்தில் எழுந்தருளியபோது அப்போது பல்வேறு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து யானை மஹால் முன்பு,  திருஞானசம்பந்தப் பெருமான், சைவ சமயத்தை நிலைநாட்டிய வரலாறான, "சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை" தல ஓதுவாரால் சொல்லப்பட்டது.



 

இதனையடுத்து சுவாமியும் அம்மனும் தெற்கு மாசி, , மேலமாசி, வடக்குமாசி, கீழமாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு வீதி உலாவந்து அருள்பாலித்தனர். சுவாமியும் அம்மனும் வீதி விழா வந்தபோது மாசி வீதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரு புறங்களிலும் வரிசையில் நின்று அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்து சென்றனர்.  சுவாமி அம்மன் வீதி உலாவின் போது சுவாமியின் முன்பாக ஏராளமான சிறுமிகள் மீனாட்சியம்மன் வேடம் அணிந்தும் சிறுவர்கள் முருகன் விநாயகர் சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் பல்வேறு இசை முழங்க ஊர்வலமாக சென்றனர்.