கோயிலுக்கு வருபவர்களை கண்ணியத்துடன் வரவேற்க வேண்டும். நல்ல கலாச்சாரத்தில் உள்ளோம். நல்ல தகுதியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் - நமீதா.

 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று காலையில் சாமி தரிசனம் செய்ய சென்றபோது தன்னிடம் மத சான்று கேட்டதாக நமிதா வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் இது தொடர்பாக இன்று மதுரை பாண்டியன் ஹோட்டலில்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய நமிதா மற்றும் அவரது கணவர் :

 

நமிதாவின் கணவர் வீரேந்திர சௌத்ரி பேசியபோது :

 

நாங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த போது இஸ்கான் கோயில் நிர்வாகிகளுடன் கோயிலுக்கு சென்ற போது அங்கு கோயில் அதிகாரிகள் தங்களை தடுத்து நிறுத்தி இந்துவா முஸ்லிமா ? என கேள்வி எழுப்பினர். நீங்கள் முஸ்லிம் என தகவல் கிடைத்துள்ளதாகவும் எனவே இந்து என்பதற்கான சான்று காண்பிக்க வேண்டும் என கூறினர். அப்போது ஆதார் அட்டை உள்ளிட்டதை காட்டிய போது அதில் மத அடையாளம் இல்லை எனக் கூறிய கோயில் அதிகாரிகள் அவமரியாதையாக பேசினர். 15 நிமிடத்திற்கு மேலாக காத்திருக்க வைத்த பின்பாக பலமுறை கூறியும் அவர்கள் கேட்க மறுத்தனர். தமிழகத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் இதுபோன்று இந்து மதத்திற்கான சான்று கேட்டது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வரக்கூடிய கோயிலில் இது போன்ற அதிகாரிகள் நடந்து கொள்வதால் தமிழகத்தின் பெயருக்கு  தவறாக அமைந்துவிடும். தாங்கள் இந்து என பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் அவர்கள் குங்குமத்தை கொடுத்து நெற்றியில்  வைக்கச் சொன்னார்கள். அதனையடுத்து நாங்கள் உள்ளே தரிசனம் செய்ய சென்றோம். இதுபோன்று தமிழகத்தில் உள்ள கோயிலில் மதச்சான்று கேட்டது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதிலும் பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ள பிறப்பால் இந்துவாக இருந்து எங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணருடைய பெயர் வைத்துள்ளோம். இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் இதுபோன்று நடந்தது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய விளக்கத்தை அளித்தும் கூட கோயில் அதிகாரிகள் அவமரியாதையாக நடந்து கொண்டனர். இதனை அரசியலாக்க வேண்டாம் என்றார்.

 

நமிதா பேசியபோது :

 

நான் 5 முறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறேன். நான் கோயிலுக்கு  ஆன்மீக பயணத்தின்போது எப்போதும் யாருக்கும் தொந்தரவு அளிக்க கூடாது என்பதற்காக யாருக்கும் தெரியாமல் செல்வேன், அதேபோன்றுதான் சென்றேன்.  மீனாட்சியம்மன் கோயிலில் 15 நிமிடத்திற்கு பின்னர் என்னிடம் முஸ்லிமா, இந்துவா என கேட்டனர். பின்னர் என் கணவர் பேசினார்.  பின்னர் தான் அனுமதித்தனர். காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி அவர்கள் தான் நல்லா தரிசனம் செய்ய வைத்தார்கள், பாதுகாப்பாக திரும்பினோம், இது தொடர்பாக புகார் அளிக்க போவதில்லை. இதுபோன்று மறுபடி நடக்க கூடாது, அனைத்து அதிகாரிகளுக்கும் வேண்டுகோள். கோயிலுக்கு வருபவர்களை கண்ணியத்துடன் வரவேற்க வேண்டும். நல்ல கலாச்சாரத்தில் உள்ளோம். நல்ல தகுதியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்  என்றார்.