தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கரந்தை கருணாசாமி கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோயில்களில் ஒன்று கரந்தை கருணாசாமி கோயில் என்றழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோயில் ஆகும். பல்லவர் கால கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோயில், திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட பெற்ற சிறப்புடைய தலமாகும்.
முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜசோழன் காலத்திய கல்வெட்டுகள், இக்கோயிலில் காணப்படுகிறது. கரிகாலச்சோழனுக்கு கருணை பாலித்த இக்கோயிலில் இறைவனை சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும் கருணாசாமி, கருந்திட்டை மகாதேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.
தஞ்சையின் வடதிசையில் உள்ள நகரப்பகுதி 'கருத்திட்டைக்குடி' என்று அழைக்கப்படுகிறது. தற்போது 'கரந்தட்டான்குடி' என்றும், 'கரந்தை' என்றும் அழைக்கப்படும் இந்த ஊர், வெண்ணாற்றிற்கு தெற்கிலும், வீரசோழ வடவாற்றிற்கு வடக்கிலுமாக இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த வளமான பகுதியாகும். தஞ்சைக்கு எவ்வளவு பழமை உண்டோ, அதனைவிட அதிக பழமை இந்த ஊருக்கு உண்டு. கரந்தையின் கிழக்குப்பகுதி மையத்தில் திகழும் பழம்பெரும் கலைச்சிறப்புமிக்க கோயிலாக கருணாசாமி கோயில். விளங்குகின்றது. இங்குள்ள இறைவன், 'வசிட்டேசுவரர்', 'கருவேலநாதர்', 'கருணாசாமி' என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம், 'பெரியநாயகி', 'திரிபுரசுந்தரி' என்பதாகும்.
1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயில், ஒரு அற்புத சமய கலைச் சின்னமாகும். இங்குள்ள மூலவர் சிவலிங்கம், வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்ட சிறப்பு கொண்டது என்கிறார்கள்.
சப்தரிஷிகளில் ஒருவராக திகழ்பவர், வசிஷ்ட ரிஷி. கற்பின் இலக்கணமாக திகழும் அருந்ததி, இவரது மனைவியாவார். இவர்கள் இருவருக்கும் சிற்ப உருவங்கள் காணப்படும் ஒரே கோவிலாக இந்த ஆலயம் உள்ளது. தென்முக குருவாக அருளும் தட்சிணாமூர்த்தியும், அவரது வலப்புறம் குருபத்தினியான அருந்ததியோடு வசிஷ்ட மகரிஷியும் அமர்ந்து இருபெரும் குருக்களாக ஞானமும், செல்வமும், அன்பும், அருளும் ஒருங்கே வாரி வழங்கிடும் அற்புத திருக்கோவில் இது. பங்குனி மாதத்தில் காலை சூரியனின் ஒளி, மூலவரின் சிவலிங்க திருமேனியில் தொடர்ந்து மூன்று நாட்கள் விழும் சிறப்புக்குரிய ஆலயம். இந்தக் கோவிலில் நடைபெறும் ஏழூர் பல்லக்கு திருவிழா, வெட்டிவேர் பல்லக்கு முதலிய சிறப்பு உற்சவங்கள், திருவிழாக்கள், தஞ்சாவூர் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தேவாரப்பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் உள்ளது. இக்கோயிலின் கிழக்கு முகப்பில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. தஞ்சையில் உள்ள மிகப்பெரிய கோவில் குளங்களுள் இதுவும் ஒன்றாகும். சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால் சோழ மன்னனுக்கு, கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்துள்ளது. அவர் அந்த நோயை தீர்க்க பல்வேறு சிகிச்சை முறைகளை கையாண்டும் பலன் கிடைக்காமல் போனது.
இந்த நிலையில் அவரது கனவில் தோன்றிய கடவுள் கருணாசாமி, 'இந்தக் கோயில் குளத்தில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) புனித நீராடி வழிபட்டால் கருங்குஷ்டம் தோல் நோய் தீர்ந்து விடும்' எனறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கரிகால் சோழன் இந்தக் குளத்தில் ஒரு மண்டலம் புனித நீராடி கருணாமூர்த்தியை வழிபட்டுள்ளார். இதனால் அவருக்கு தோல் நோய் நீங்கியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. வசிஷ்டேஸ்வரர், பெரிய அம்மன் சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருள, கொடிமரத்திற்கு திரவிய பொடி, மஞ்சள், தயிர், பால், சந்தனம் ஆகியவற்றால் சிவாச்சாரியார்கள் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து நந்தி உருவம் பொறித்த கொடியை மேள தாளங்கள், சிவகணங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.