பிரசித்தி பெற்ற சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்வான முத்துசட்டநாதர் உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

Continues below advertisement

சீர்காழி சட்டைநாதர் கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 

Continues below advertisement

திருஞானசம்பந்தர் வரலாறு

சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. சங்கம முர்த்தமான சட்டைநாதர் விஷ்ணுவின் தோலை சட்டையாக உடுத்தியதால் இப்பெயர் உண்டாயிற்று. சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் அழுது நின்ற போது உமையம்மை ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளித்த ஸ்தலமாகவும், ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது 3வது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தை அருளிய தளமாகவும் விளங்கி வருகிறது. 

சித்திரை பெருவிழா

இத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் சித்திரை 1-ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு சித்திரை பெருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 2-ம் நாள் உற்சவமான பிரசித்தி பெற்ற திருமுலைப்பால் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிவிகை பல்லக்கில் திருஞானசம்பந்தர் பிரம தீர்த்த கரையில் எழுந்தருள, தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருநிலை நாயகி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி தங்க கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருஞானசம்பந்தருக்கு காட்சியளிக்கும் வைபோகமும் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குழந்தைகள் ஞானம் பெற வேண்டி சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு பழங்கள் கலந்த பாலினை நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்தினர். 

முத்துசட்டை நாதர் உற்சவம்

சித்திரை பெருவிழாவின் நிறைவு நிகழ்வாக விழாவில் முக்கிய நிகழ்வான ஸ்ரீ முத்துசட்டை நாதர் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக முத்து சட்டநாதர் வசந்த மண்டபம் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பூர்ணாகதி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி முத்து சட்டநாதருக்குசிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தருமை ஆயிரம் திருக்கரங்களால் அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது.