ஆடி மாதம் என்றாலே அத்தனை சிறப்புகள் நிறைந்தது ஆகும். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை என ஒவ்வொரு நாளுமே ஆடி மாதத்தில் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நிலையில், ஆடி மாதம் வரும் 17-ந் தேதியுடன் முடிய உள்ளது. ஆடி மாதங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அதுவும் ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


நடப்பு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை வரும் நாளை மறுநாள் வரும் வெள்ளியே ஆகும். இந்த நிலையில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே காணலாம்.


குத்துவிளக்கு பூஜை:


கோயில்களில் வழக்கமாக சிறப்புவாய்ந்த நாட்களில் விளக்கு பூஜை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆடி வௌ்ளிக்கிழமை நடைபெறும் குத்துவிளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆடி மாதங்களில் களைகட்டும் அம்மன் கோயில்கள் இந்த ஆடி கடைசி வெள்ளிக்கிழமை தினத்தில் நடக்கும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி கடைசி வெள்ளியில் நடக்கும் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்றால் பெண்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபிக்‌ஷம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.


விரதம்:


ஆடி கடைசி வெள்ளியில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். காலையில் அம்மனுக்கு விளக்கேற்றி  தீபராதனை செய்து, ஏதேனும் பால்பாயாசம் அல்லது சர்க்கரை பொங்கலை நைவேத்யம் செய்ய வேண்டும். மாலையிலும் அதேபோல விளக்கேற்றி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஆடி மாத கடைசி வெள்ளியில் செய்யும் விரதத்தில் வீட்டில் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும் ( உடல்நலக்குறைவு இருப்பவர்கள், வயதானவர்கள் விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை)


சுமங்கலி பூஜை:


ஆடி மாதத்தில் பெண்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளில் நடத்தும் பூஜை சுமங்கலி பூஜை ஆகும். தங்கள் மாங்கல்யம் பலம் பெறுவதற்காகவும், செல்வ செழிப்புடன் வாழவும் இந்த பூஜைகளை செய்வார்கள். ஆடி மாத கடைசி வெள்ளியில் பெரும்பாலான பெண்கள் தங்கள் வீடுகளில் இந்த பூஜைகளை செய்வார்கள். அக்கம்பக்கத்தில் வசிக்கும் சுமங்கலிகளை அழைத்து இந்த பூஜைகளை அவர்கள் செய்வார்கள்.


அம்மனுக்கு சிறப்பு பூஜை:


ஆடி மாத கடைசி வெள்ளியன்று மிகவும் விசேஷமான நாள் என்பதால் குடும்பத்துடன் அம்மன் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்யலாம். சிறப்பு வாய்ந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வணங்குவதன் மூலம் மனம் குளிரும்.


தங்களால் எதுவும் செய்ய இயலாதவர்கள் தங்கள் வசிக்கும் அல்லது தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடலாம். இல்லாவிட்டால், தங்கள் வீடுகளிலே மனம் உருகி தெய்வத்தை வழிபட்டாலே சிறப்பு ஆகும்.


மேலும் படிக்க: Aadi Krithigai: இன்னும் திருமணமாகவில்லையா? கவலைப்படாதீங்க.. இன்றே உகந்தநாள்...! இதை செய்யுங்க


மேலும் படிக்க: ஆடி கடைசி வெள்ளி... நன்மைகளை வாரி அருளும் இருக்கன்குடி மாரியம்மன்..! குவியும் பக்தர்கள்..!