WWE WrestleManiaவில் பல வீரர்கள் வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒரு மனிதன் மட்டும் அந்த வரலாற்றை மீண்டும் மீண்டும் உருவாக்குகிறான். அவர் தான் ஜான் சீனா. “Never Give Up” என்ற முழக்கத்துடன் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த இவர், WrestleMania-வில் கோடி ரோட்ஸை வீழ்த்தி மீண்டும் ஒரு முறை, தன்னுடைய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி, தன்னுடைய நம்பிக்கையையும், போராட்ட குணத்தையும் நிரூபித்துள்ளார்.
WrestleMania 41:
WWE எனும் சண்டை போட்டியில் WrestleMania எனும் பிரிவு போட்டி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது. அதாவது கிரிக்கெட்டில் உலகக் கோப்பை போட்டி போன்றது என சொல்லலாம். இந்நிலையில் நேற்றைய தினம் ஏப்ரல் 20-ம் தேதி, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள அலீஜியன்ட் ஸ்டேடியத்தில் WrestleMania 41 போட்டி நடைபெற்றது. அதில், கோடி ரோட்ஸை வீழ்த்தி ஜான் சீனா வெற்றி பெற்றார். இதன் மூலம் 17வது உலக சாம்பியன் பட்டத்தை வென்று, ரிக் ஃபிளேர் வைத்திருந்த 16 பட்டங்களின் சாதனையை முறியடித்தார்.
Also Read: Subhanshu Shukla: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்தியர்: சுபான்ஷூ சுக்லா யார்?
சண்டையின் சூடான தருணங்கள்:
ஜான் சீனா மற்றும் கோடி ரோட்ஸ் இடையிலான போட்டியானது சுமார் 24 நிமிடங்கள் நீடித்தது. இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. தொடக்கத்திலிருந்தே இருவரும் ஒருவரை ஒருவர் மோதிய விதம் ரசிகர்களை விளிம்பு நாற்காலியில் வைத்தது. சப்மிஷன்கள், ஸ்லாம்கள், ஸ்டண்ட்கள் அனைத்தும் இடம் பெற்றன. போட்டியின்போது ராப்பர் டிராவிஸ் ஸ்காட், நடுவரை சற்று கவனச்சிதறலுக்கு உள்ளாக்கினார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, சீனா கோடியை தாக்கி, வெற்றி பெற்றார். ஜான் சீனாவின் அனுபவமும், உறுதியும் அவரை வெற்றிக்கு வித்திட்டது என்றே சொல்லலாம். அரங்கம் முழுவதும் சீனாவின் பெயரை கூவிய அதிர்வுடன் அதிர்ந்தது.
சீனாவின் உரை: “இந்த வெற்றி உங்களுக்காக தான், வெற்றிக்கு பிறகு மைக் பிடித்த சீனா, “இந்த வெற்றி என்னுடையது இல்லை, இது உங்களுக்காக, என் ரசிகர்களுக்காக. நான் எப்போதும் சொல்வது போல – Never Give Up!” என உருக்கமாக கூறினார். அவரது உரையும், உணர்ச்சியும் அனைவரது ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தியது.
Also Read: E-Pass: நீலகிரியின் 4 இடங்களில் மட்டும் இ பாஸ்..சுற்றுலா போறவங்க நோட் பண்ணிக்கோங்க!
ஜான் சீனா:
ஜான் சீனா WrestleMania-வில் மீண்டும் சாம்பியனாக உயர்ந்ததோடு, தனது ரசிகர்களின் நம்பிக்கையை மற்றொரு முறை தக்க வைத்தார். இவர் வெறும் ஒரு ரெஸ்ட்லர் அல்ல – ஒரு நம்பிக்கையின் நாயகன் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
2025-ம் ஆண்டை தனது இறுதி வருடமாக அறிவித்துள்ள சீனா, இந்த வெற்றியானது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும், WWE-யில் வழிகாட்டியாகவும், தூதுவராகவும் தொடர்ந்தும் பங்களிக்க திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான நிகழ்ச்சியாக இருந்த WWE, தற்போது இருக்கிறதா என்றால் சந்தேகம்தான். ஏனென்றால், இது சித்தரிக்கப்பட்ட நிகழ்ச்சி என்றும், உண்மையான சண்டை நிகழ்ச்சி என கூறி வரும் நிலையில், சில சண்டைகள் உண்மைதான் எனவும் சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், பலரின் ஃபேவரைட் ஜான் சீனாவின் வெற்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.