இலங்கை நாட்டில் நடைபெற்ற கார் விபத்தில் அந்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கட்டுநாயக்க நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி நிஷாந்த சென்று கொண்டிருந்தபோது  இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியதோடு மட்டுமல்லாமல் சாலையின் மீதிருந்த தடுப்புச் சுவரிலும் மோதியது. இதில் அமைச்சருடன் பயணித்த பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


சனத் நிஷாந்த அரசியல் வாழ்க்கை 


கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து சனத் நிஷாந்த நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒரு பகுதியாக அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். அவர் இலங்கை அரசின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். 






விபத்தில் இறந்த சனத் நிஷாந்த பல தடவை தாக்குதல்கள் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு அவரும், அவரது சகோதரர் ஜகத் சமந்தவும் இணைந்து ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கினர். பணியில் இடையூறு செய்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து  2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது சனத் நிஷாந்த் மற்றும் அவரது ஆதரவாளர்களும், அதிபர்  வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகத்தைத் தாக்கி அவரது ஆதரவாளர்களைத் தாக்கினர். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் மீது கடந்தாண்டு பிடிவாரண்டு பிறக்கப்பட்டது. 


கடந்த 2020 ஆம் ஆண்டு நீர்கொழும்பில் உள்ள சதுப்புநிலங்களை அழித்து கைப்பந்து மைதானம் அமைக்க உள்ளூர் மக்களை நிர்ப்பந்தம் செய்வதாக சனத் நிஷாந்த் மீது சர்ச்சை எழுந்தது. இப்படியான நிலையில் அவர் கார் விபத்தில் மரணமடைந்தது அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.