இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் சிக்கி இரண்டு நாட்கள் உயிருடன் புதைந்து கிடந்த ஆறு வயது சிறுவன் அதிசயமாக உயிர் தப்பினான்.


இந்தோனேசியா நிலநடுக்கம் :


இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 268-ஆக உயர்ந்துள்ளது என்று மேற்கு ஜாவா கவர்னர் ரித்வான் கமில் தெரிவித்தார். அந்நாட்டின் முக்கிய தீவான ஜாவாவை நிலநடுக்கம் உலுக்கி உள்ளது. ரிக்டர் அளவில் 5.6 என பதிவாகியுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 260க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கட்டடங்கள் சேதமடைந்தன.


இதன் தொடர்ச்சியாக, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா வரை, இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.



நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அச்சம் காரணமாக, மக்கள் சாலைகளில் அலறி ஓடினர்.  சுமார், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது. 


இந்த நிலநடுக்கத்தின் போது அஸ்கா மௌலானா மாலிக் என்ற 6 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 


சியாஞ்சூரில் உள்ள நாக்ராக் கிராமத்தை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது. இதில் அஸ்கா மௌலானா மாலிக்கின் தாய் மற்றும் பாட்டி உயிரிழந்தனர். 6 வயதே ஆன அஸ்கா மௌலானா மாலிக்கும் மண்ணில் சிக்கி புதைந்தார். தொடர்ந்து மீட்பு படையினர் இறவர்களின் உடல்களை மீட்கும்போது மாலிக் உயிருடன் இருப்பதை கண்டு மீட்டனர். அஸ்கா ஒரு மெத்தையால் பாதுகாக்கப்பட்டதால் உயிர் பிழைத்தார் எனக் கூறப்படுகிறது. இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய நிறுவனம் (BNPB) பகிர்ந்த காணொளியில், சிறுவன் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்பு அதிகாரிகளால் வெளியே எடுக்கப்பட்டபோது, ​​உயிருடன் இருப்பதை காட்டியது.


 "அஸ்கா உயிருடன் இருப்பதை நாங்கள் உணர்ந்தவுடன், நான் உட்பட அனைவரும் கண்ணீர் விட்டனர், " என்று 28 வயதான தன்னார்வலர் ஜாக்சன் கூறினார். அஸ்காவின் காயங்கள் குறைவாக இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பசியால் பலவீனமாக இருப்பதாகவும், வீடு திரும்ப விரும்புவதாகவும் அஸ்காவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறினார். ”இந்த நிலநடுக்கத்தால் அதிக எண்ணிக்கையில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் அதிக சுகாதார பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.


கிராமங்களில் இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கிராமங்களில் இன்னும் நிறைய குடும்பங்கள் மீட்கப்படாமல் உள்ளனர்" என்கிறார் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர். நகரத்தில் உள்ள கடைகள், மருத்துவமனை மற்றும் இஸ்லாமிய உறைவிடப் பள்ளி ஆகியவை நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளன. சியாஞ்சூரில் உள்ள பல கட்டிடங்கள், அவற்றின் கூரைகள் இடிந்து விழுந்தன.


Malaysia: மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம்: மன்னர் மாளிகை அறிவிப்பு...!


China Covid - 19: சீனாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா.. மீண்டும் அமலுக்கு வரும் சீரோ கோவிட் பாலிஸி


Russia- Ukraine War: மகப்பேறு வார்டு மீது தாக்குதல்... பச்சிளம் குழந்தை பலி... கொதித்தெழுந்த உக்ரைன் அதிபர்