Google Lay Off: ”அலுவலகம் அரசியலுக்கான இடமில்லை”: 28 பேர் பணிநீக்கம் குறித்து கூகுள் தெரிவித்தது என்ன?
Google CEO Sundar Pichai: கூகுள் நிறுவனத்தில் போராட்டம் நடத்தியது தொடர்பாக 28 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கூகுள் நிறுவனமானது, இஸ்ரேலுடன் தொழில்நுட்ப ரீதியாக வணிக அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில், இஸ்ரேலுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்:
மத்திய கிழக்கு பகுதி நாடுகளான இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டு எதிர்ப்பாளர்கள் சிலர், இஸ்ரேலுடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டதை எதிர்ப்பு தெரிவித்து, அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. மேலும் போராட்டத்தில் தொடர்புடைய 28 நபர்களை பணி நீக்கம் செய்தது.
இஸ்ரேலுடன் நெருக்கமாக பணிபுரியும் நிறுவனத்திற்கு எதிராக ஊழியர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, போராட்டங்கள் தொடர்பாக மேலும் 28 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அரசியல் செய்வதற்கான இடம் இல்லை:
இச்சம்பவம் குறித்து கூகுள் தரப்பில் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாவது, கூகுள் நிறுவனமானது சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் சிறந்த யோசனைகளை செயல்பாட்டின் வடிவமாக மாற்றுவதற்கும் உதவுகிறது. கூகுள் நிறுவனமானது துடிப்பான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்துக்கு என்று கொள்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தெளிவாக உள்ளன.
இது ஒரு வணிக நிறுவனம், இங்கு சக ஊழியர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அல்லது பாதுகாப்பிற்குஅச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட அனுமதி இல்லை. அலுவலகம் சார்ந்த இடத்தில் அரசியல் சார்ந்த செயல்பாட்டுக்கும் தனிப்பட்டவரின் விருப்பத்திற்கு இடம் இல்லை.
எவ்வாறு வேலை செய்கிறோம், எப்படி நிறுவனத்துடன் ஒத்துழைக்கிறோம் மற்றும் நிறுவனத்துடனான உடன்பாடு குறித்து ஊழியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
இஸ்ரேலுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதற்காக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.