கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையில் மீண்டும் விமான போக்குவரத்து சேவையை இலங்கை அரசு துவக்கவுள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார். 


இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொடர்ந்து பேசுகையில், இந்த விமான சேவையின் மூலம், இலங்கை நாட்டு சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன்,  நாட்டின் நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு நாட்டிற்கும் அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் ஆதாரங்களில் சுற்றூலாத்துறையும் ஒன்று. அதேபோல், இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்கி வருகிறது. இந்நிலையில், 2020-ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று பரவி, மற்ற நாடுகளைப்போல், இலங்கை நாட்டின் சுற்றுலாத் துறையையும் கடுமையாக முடக்கியது. அத்துடன், பல்வேறு வழிகளில் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் சுற்றுலாத்துறை மூலம் ஏற்பட்ட இழப்பீடும் ஒன்று என அவர் கூறியுள்ளார். 


மேலும், தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் கூடிய விரைவில் இயக்கப்படும்,  இந்த விமான சேவை அநேகமாக டிசம்பர் 12-ஆம் தேதிக்குள் தொடங்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்தார். மேலும், விமானத்தின் ஓடுபாதையை விரிவாக்கம் செய்யும் பணிகள் மற்றும் சீரமைக்கும் பணிகள் செய்யவேண்டி உள்ளதால், தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட  சிறிய ரக விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்றும் அவர் கூறினார். 


2019-இலேயே இந்த விமான நிலையத்துக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விமான நிலையத்துக்கு முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது கூடுதல் சிறப்பு.  2019ல் இந்தியா மற்றும் இலங்கை என இரு நாடுகளும் இணைந்து இந்த விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்தது.


முன்னதாக, இந்தியாவின் விமான நிறுவனங்கள் சென்னையில் இருந்து பலாலிக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கின.  2019 நவம்பரில் இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்குப் பின்னர், விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர்தான் இலங்கையின் பொருளாதாரம் வெகு விரைவாக வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.