விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஏரியில் குளித்த சிறுவர்கள் மூன்று பேர் உயிரிழப்பு


விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கோட்டமருதூர் கிராமம். இந்த கிராம பகுதியில் உள்ள ஏரியில் நேற்று மாலை மீன்பிடிப்பதற்காக வலையை வீசி உள்ளனர். அப்போது மீனவர் வலையை இழுத்த போது அதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கோட்டமருதூர் கிராமத்தில் விசாரணை செய்தபோது அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இல்லை என தெரியவர உடனடியாக சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


காவல்துறையினரின் விசாரணையில் அரகண்டநல்லூர் அடுத்த மனம் பூண்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் ஜீவிதன் (10) தர்ஷன் (8) ஆகிய இருவர் என தெரிய வந்துள்ளது. பின்னர் அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுக்கபட்டது. அதன் பின்னர் அவர்களுடன் மூன்றாவதாக ஒரு சிருவன் வந்ததாகவும் அவனையும் காணவில்லை என கூறியுள்ளனர். இதனை அடுத்து உள்ளூர் மக்களின் உதவியுடன் ஏரியில் தேடியபோது சடலமாக ஹரிஹரன்(11) என்ற சிறுவனின் சடலம் கிடைத்துள்ளது.


பின்னர் மூன்று சிறுவர்களின் உடலையும் மீட்ட அரகண்டநல்லூர் காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.