விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் முன்னாள் கோட்டாட்சியர், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.


விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள  பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தின் போது அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களில் இதுவரை 45 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 28 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர்.


அரசு தரப்பு 47-வது சாட்சியாக விழுப்புரம் முன்னாள் கோட்டாட்சியரும் தற்போது தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றி வருபவருமான பிரியா நேரில் ஆஜரானார். அப்போது அவர், மதியம் 2.15 மணியளவில் மாவட்ட நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர், தான் 2011 முதல் 2012-ம் ஆண்டு வரை விழுப்புரத்தில் கோட்டாட்சியராக பணியாற்றியபோது பூத்துறை செம்மண் குவாரியில் முறைகேடு நடந்ததாக எனக்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் அதுகுறித்து கூட்டு புலத்தணிக்கை செய்ய வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.


அதன்பேரில் அவர்கள் கூட்டு புலத்தணிக்கை செய்து அதன் அறிக்கையை எனக்கு அனுப்பினர். அந்த அறிக்கையின்பேரில் கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகியோருக்கு உரிய விளக்கம் கேட்டு 19.12.2011-ல் நோட்டீஸ் அனுப்பியதாகவும் அதற்கு அவர்கள் தரப்பில் காலஅவகாசம் கேட்டனர். ஆனால் காலஅவகாசம் முடிந்தும் அவர்கள் தரப்பில் இருந்து உரிய பதில் இல்லை. இதனால் அவர்கள் 3 பேருக்கும் விளக்கம் கேட்டு மீண்டும் 2-வது முறையாக 19.4.2012-ல் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவித்தனர். மேலும் கூட்டு புலத்தணிக்கை செய்த ஆவணங்களின் நகல்களை பார்வைக்காக ஒப்படைக்கும்படி அவர்கள் கேட்டனர்.


இதுசம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று அவர்கள் கேட்ட ஆவணங்களை ஒப்படைக்க இருந்த சூழலில் நான் விழுப்புரத்தில் இருந்து இடமாறுதலில் சென்றுவிட்டேன் என்றுகூறி சாட்சியம் அளித்தார். பின்னர் அவரிடம் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் தரப்பு வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை செய்தனர். இந்த விசாரணை மாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது. குறுக்கு விசாரணை முழுவதையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இதன் வழக்கு விசாரணை மீண்டும் இன்று நடைபெறும் என உத்தரவிட்டார்.