இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு, தூதரக அளவில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Continues below advertisement

கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளது என்ன.?

அந்த கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு துயர சம்பவத்தை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இன்று(13.07.25) அதிகாலையில், 7 மீனவர்கள், பதிவு எண் IND-TN-10-MM-746 கொண்ட அவர்களின் இயந்திர மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டனர். அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், மற்றொரு இயந்திர படகு (IND-TN-10-MM-1040) இலங்கை கடற்படை கப்பலால் மேதப்படடதாகவும், பின்புறம் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிய வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

மேலும், மீண்டும் மீண்டும் நிகழும் இந்த சம்பவங்கள் மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவை நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களை நீண்ட கால பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர்ந்து துயரங்களுக்கும் உள்ளாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மீனவரகளில் பலர், இன்னும் இலங்கை காவலில் உள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புவதாகவும், தற்போது 232 தமிழக மீன்பிடி படகுகளும், 50 மீனவர்களும் இன்னும் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தொடர்ச்சியான அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிடைக்கக் கூடிய அனைத்து தூதரக வழிகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை, அதிலும் குறிப்பாக தமிழக மீனவர்களை கைது செய்வது வாடிக்கையாகவே நடந்து வருகிறது. எத்தனையோ முறை கடிதங்கள் அனுப்பப்பட்டும், பெரிய அளவில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்த முறையாவது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு உரிய அவசர நடவடிக்கையை எடுக்குமா என்பதை பார்க்கலாம்.