நெல்லையில் உதவி ஆய்வாளரை கத்தியால் கழுத்தை அறுத்த நபர் கழிவறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரின் கை முறிவு  ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மார்க்ரெட் திரேஷா. இவர் நேற்றிரவு சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேஷாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.


இதில் உதவி ஆய்வாளருக்கு இடது கன்னம் இடது கழுத்து மற்றும் வலது மார்பு ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நெல்லையில் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி பெண் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் காவலருக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதலமைச்சர் ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டார்.


இந்த நிலையில், நெல்லையில் உதவி ஆய்வாளர் மார்க்கெட் தெரசாவை கத்தியால் கழுத்தை அறுத்த ஆறுமுகம் கழிவறை சுவரில் வழுக்கி விழுந்ததாகவு, இதில் அவரின்   கை முறிவு ஏற்பட்டு விட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.



இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேஷாவை அமைச்சர் ராஜகண்ணப்பன், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, முதலமைச்சரின் பொதுநிவாரணத்தில் இருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.




நடந்தது என்ன? 


 இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சில தினங்களுக்கு முன்பு  வாகன தணிக்கையில் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேஷா வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஆறுமுகம் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்துள்ளார். அந்த பகையை மனதில் வைத்து கொண்டு நேற்று பணியில் இருந்தபோது கையில் இருந்த சின்ன கத்தியால் மார்க்ரெட் திரேஷாவை ஆறுமுகம் குத்தியுள்ளார். இதையடுத்து ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே நெல்லையில் சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டது. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு குண்டுவெடிப்பு என அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.