விருதுநகர் அருகே தண்டவாளத்தில் படுகாயத்துடன் கிடந்த காவலரை ரயில்வே காவல்துறையினர் மீட்டனர். தன்னை மர்ம கும்பல் தாக்கி செல்போனில் பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக காவலர் புகார் தெரிவித்தார்.




தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படையில் உள்ளார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல நேற்று முன் தினம் இரவு சென்னையிலிருந்து திருச்செந்தூர் விரைவு ரயில் ஏறி கோவில்பட்டி நோக்கி சென்றார். இந்த நிலையில் அதிகாலை விருதுநகர் அருகே பட்டம் புதூர் பகுதியில் தண்டவாளம் அருகே பலத்த காயத்துடன் விழுந்த கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்து ஜெயக்குமாரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் இனி மரண தண்டனை; எங்கே? மசோதா தாக்கல்!


இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், முன்பதிவு இல்லாத பெட்டியில் தான் பயணம் செய்த போது நள்ளிரவில் மர்ம கும்ப கும்பல் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் அவர்கள் செல்போனை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே திருச்செந்தூர் செல்லும் வழியில் குரும்பூர் ரயில் நிலையத்துக்கு திருச்செந்தூர் விரைவு ரயில் வந்தபோது காவலர் ஜெயக்குமாரின் பையை அங்கிருந்து ரயில்வே போலீசார் மீட்டனர். அதில் ஜெயக்குமாரின் செல்போன் உட்பட அனைத்து பொருட்களும் பத்திரமாக இருந்தன. ஆனால் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் செல்போனை பறித்துக் கொண்டதாக காவலர் ஜெயக்குமார் ரயில்வே காவல்துறையில் கூறிய நிலையில், அவரது பைக்குள் எவ்வாறு செல்ஃபோன் வந்தது? ஒருவேளை அவர் போலீஸ் என்பது தெரிய வந்ததால் செல்போனை அவரது பைக்குள் வைத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனரா என்பது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.