இலங்கைக்கு கடத்த முயன்ற 26 கோடி மதிப்பிலான சாரஸ் போதை பொருள் பறிமுதல்- வக்கீல் உள்ளிட்ட 3 பேர் கைது




கண்காணிப்பு


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது, பீடி இலை, கஞ்சா உள்ளிட்டவை பிடிபட்டு வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதைபொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.




அதன்பேரில் கியூ பிரிவு போலீஸ் ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திரேஸ்புரத்தில் இருந்து வடபகுதியில் உள்ள கடற்கரையில் 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் படகுக்காக காத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த பாக்கெட்டை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.


சாரஸ் பறிமுதல்


அதில் தலா ஒரு கிலோ எடை கொண்ட 56 பாக்கெட்டுகள் இருந்தன. இதில் மஞ்சள் நிறத்தில் அல்வா போன்ற பொருள் இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது, அது கஞ்சா செடியில் இருந்து தயாரிக்கப்படும் சாரஸ் போதை பொருள் என்பது தெரியவந்தது. இந்த சாரஸ் கஞ்சா செடியின் பிசினில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் 56 கிலோ சாரஸ் போதை பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.28 கோடி என்று கூறப்படுகிறது.




இதைத் தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர்  அமல்ராஜ்(வயது 46), தெர்மல்நகர் பகுதியை சேர்ந்த கேம்ப்-2 சுனாமி காலனியை சேர்ந்த நிஷாந்தன்(32), கோவில்பிள்ளை விளையை சேர்ந்த இன்பென்ட் விக்டர்(31)  எ்ன்பது தெரியவந்தது. மேலும் அவர்கள், சாரஸ் போதைபொருளை ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு கடத்தி வந்து உள்ளனர். தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு சாரஸ் போதை பொருளை கடத்த முயன்றது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் பிடிபட்டவர்களை தூத்துக்குடி மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை பொருள் பிடிபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  அங்குள்ள ஒருவீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில், 8 பாலித்தீன் பாக்கெட்களில், தலா ஒரு கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.விசாரணையில், அவை 'ஐஸ்' என்று அழைக்கப்படும் 'கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்' என்ற உயர்ரக போதைப் பொருள் என்பதும் தெரியவந்தது. சுமார் 60 சதவீதம் தூய்மையான இந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.