தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் 583 பேர் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் மொத்தம் நான்கு தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நான்கு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 5026 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 583 பேர் தேர்வு எழுதவில்லை. தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. அதன்படி தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம், பிரிஸ்ட் யுனிவர்சிட்டி ஆகியவற்றில் ஆண்களுக்காக தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றில் மகளிருக்கான தேர்வுமையம் அமைக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்தியது. இதில் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான 3,665 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதில், காவல் துறையில் 2,833 காவலர்கள், சிறைத் துறையில் 180 சிறைக் காவலர்கள், தீயணைப்புத் துறையில் 631, தீயணைப்பாளர்கள் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு பணியிடங்கள் 21 ஆகியவை அடங்கும்.
தேர்வு மையங்களுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வரங்கிற்குள் கைப்பேசி, ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், ப்ளூடூத் சாதனம் போன்ற எந்த மின்னணு பொருட்களையும் கொண்டுவரக் கூடாது எனக் கடுமையான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தகட்டமான உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் விதமாக டிஐஜி, எஸ்.பி, டிஎஸ்பி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) கடந்த ஆகஸ்ட் மாதம், மொத்தம் 3,665 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில், காவல் துறையில் 2,833 பணியிடங்கள், சிறைத்துறையில் 180 சிறைக் காவலர் பணியிடங்கள், தீயணைப்புத் துறையில் 631 தீயணைப்பாளர் பணியிடங்கள் மற்றும் பழங்குடியினருக்கான 21 சிறப்பு இடங்கள் அடங்கும்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 2.25 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்காக பதிவு செய்திருந்தனர். மாநிலம் முழுவதும் 45 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. ஒவ்வொரு மையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், முதல்முறையாக விண்ணப்பதாரர்களின் இடது கை பெருவிரல் ரேகை சரிபார்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தேர்வின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்வுக்கு வருபவர்கள் தங்களின் நுழைவுச்சீட்டு உடன் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலைக் கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும். அடையாளச் சான்று இல்லாமல் வருபவர்கள் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படியே தேர்வு மையங்களிலும் தீவிர சோதனைப்பணி நடந்தது.