வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் 110 கிலோ மீட்டர் வேக ரயில் சோதனை ஓட்டத்தில் 15 நிமிடத்தில் ரயில் நாகையை வந்தடைந்தது.

 

வேளாங்கண்ணியிலிருந்து வேக சோதனை மேற்கொள்ளும் வகையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில்  ரயில் இன்று  இயக்கப்பட்டது. நாகை - வேளாங்கண்ணி  சுமார் 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட  இந்த ரயில் பாதை, கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது.  இப்பாதை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மண் இறுகும் தன்மையற்றதாக இருந்ததால், இத்தடத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்குள் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், 10 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியது. இந்நிலையில், இந்தப்பாதையின் தரத்தை மேம்படுத்தி, ரயில்களின் இயக்க வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பது ரயில் பயன்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து  வந்தது.

 


 



 

அதைத் தொடர்ந்து, நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில், ரயில் பாதையின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணியும், அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் ரயில்வே நிர்வாகம் சார்பில்  இரண்டாட்டாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இத்தடத்திலான சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி, ரயில்வே நிர்வாகத்தின் தொழில்நுட்பப் பிரிவு மூலம் இரு முறை சோதனைகள் நடத்தப்பட்டன.

 



 

இதனை தொடர்ந்து தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான  50 பேர் கொண்ட குழு நாகை ரயில் நிலையத்தில் இருந்து  வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் டிராலியில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று மாலை வேளாங்கண்ணியிலிருந்து அதிவேக ரயிலை இயக்கி வேக சோதனை மேற்கொள்ளும் வகையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டது.  வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் வேக சோதனை ரயில் அடுத்த 15 நிமிடங்களில் நாகையை வந்தடைந்தது.