தஞ்சாவூர் மாவட்டத்தில் எங்கு மழை அதிகம் தெரியுங்களா?
டெல்டா மாவட்டங்களில் நாளை 3ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதில் கடந்த 2 நாட்களாக தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக இருந்த வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் ஒரத்தநாட்டில் அதிக மழையளவு பதிவாகி உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நாளை 3ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதில் கடந்த 2 நாட்களாக தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. தஞ்சையில் கடந்த 28ம் தேதி அரை மணிநேரம் கனமழையாக பெய்தது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த மழை குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று 1ம் தேதி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் தஞ்சை மாநகரம், ஒரத்தநாடு, வேங்கராயன் குடிகாடு போன்ற பகுதிகளில் கனமழையும், மற்ற பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது. தஞ்சை மாநகரில் விட்டு விட்டு காலை முதல் மாலை வரை மழை பெய்ததால் ஜில்லென்று குளிர் காற்று வீசியது.
இந்த மழை கோடை உழவு மேற்கொள்ள உள்ள விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மழையை பயன்படுத்தி வயலை உழும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): ஒரத்தநாடு 31, நெய்வாசல் தென்பாதி 28, குருங்குளம் 24.4, வெட்டிக்காடு 21.8, அதிராம்பட்டினம் 17.4, மதுக்கூர் 14.6, பேராவூரணி 14.2, தஞ்சாவூர் 13.5, ஈச்சன்விடுதி 12, பட்டுக்கோட்டை 8, வல்லம் 7, மஞ்சளாறு 3.8, திருவிடைமருதூர், அணைக்கரை தலா 2, கும்பகோணம், பாபநாசம் தலா 1. இவ்வாறு மழையளவு பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில், சாகுபடி நிலங்கள் காய்ந்து கிடந்தன. இந்நிலையில், 2 நாட்களாக பெய்து வரும் மழை கோடை நெல், உளுந்து, எள், நிலக்கடலை, மக்காசோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர் இந்த மழை காரணமாக சம்பா, தாளடி பருவ நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.