தஞ்சாவூர் புன்னைநல்லுார் மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில், முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. சிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் சோழ மன்னர்களால் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. பின்னர் மராட்டிய மன்னர்களால் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது. தற்போது இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. ஜூலை 2014 ஆம் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இக்கோயிலுக்கு வருகை தந்து முத்துமாரியம்மனையும், துர்கையையும் வழிபட்டுச் சென்றுள்ளார்.




ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு எடுப்பது, உப்பு, மிளகு இடுவதும், வேப்பஞ்சேலையை உடுத்தி, அக்கினி சட்டி எடுப்பதும், கோயில் தீர்த்தமான வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கி போடுவதும் பக்தர்களால் செய்யப்படுகின்றது. மேலும் பக்தர்கள் நோய்களுக்கு, புற்று மண்ணை பிரசாதமாகக் வழங்கப்படுகின்றது. இக்கோயிலில், ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிகிழமை அம்மனுக்கு பூச்சோரிதல் விழாவும், ஆடி கடை ஞாயிற்றுக்கிழமை முத்துப்பல்லக்கு பெருவிழாவும், ஆவணி மாதம் தேரேட்டம், புரட்டாசி மாதம் தெப்பம் விழா உளிட்டவைகள் விஷேதமாகும். இதனால் விஷேச நாட்கள் மட்டுமின்றி, வருடந்தோறும் பொது மக்கள் காலை முதல் இரவு வரை தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். பக்தர்கள் தங்களது நினைத்த காரியம் வெற்றி பெற்று விட்டால், ஞாயிற்றுகிழமை இரவு தங்கி, திங்கட்கிழமை வீட்டிற்கு செல்வார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதை தடுக்கும் விதமாக, இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக  சார்பில் வீணாகும் தேங்காய் தண்ணீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நவீன இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் தேங்காய் நேர்த்திக்கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக இந்தக் கருவி இக்கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு 7 லட்சம் எனவும் இந்திய உணவு பதன கழகம் நிறுவனம்  அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இயந்திரத்தை, மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நீர்வளத்துறை துறை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.




இது குறித்து அலுவலர் கூறுகையில், தஞ்சாவூர் புன்னைநல்லுாரி மாரியம்மன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தேங்காய் உடைத்து, தரிசனம் செய்கிறார்கள். இதனால் தினந்தோறும் சராசரியாக சுமார் 5 ஆயிரம் பேர் தேங்காய்களை வழிபாட்டிற்காக உடைக்கின்றார்கள். தேங்காய்களை உடைக்கும் போது, அதிலுள்ள தண்ணீர் கீழே விழுந்தும், சிதறியும் அப்பகுதி முழுவதும் வீணாகி விடுகிறது. சில நேரங்களில் வழுக்கி விழுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் ஒரு விதமான அசுத்த நாற்றம் வருவதால், கோயிலுக்குள் வரும் பக்தர்கள் முகத்தை சுழித்த கொண்டு செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு, நவீன முறையில், இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவிலேயே முதன் முறையாக, தஞ்சாவூர் புன்னைநல்லுார் மாரியம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த இயந்திரத்தில் தேங்காய்களை உடைக்கும் போது, சரியான கோணத்தில் உடைப்பதால், தேங்காயில் உள்ள தண்ணீர் இயந்திரத்திற்குள் விழுந்து, பின்னர் குளிரூட்டப்பட்ட இயந்திரம் மூலம் வெளியிலுள்ள பைப்பில் வருகிறது. பக்தர்கள், பைப்பில் வரும் தண்ணீரை பிடித்து பருகலாம். தேங்காய்களை சரியான கோணத்தில் உடைப்பதால், அதனை ஏலம் விடலாம். இயந்திரத்தில் சேகரிக்கும் தேங்காய் தண்ணீர், சுமார் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல், தரமான வகையில் இருக்கும். ஆனால் தற்போது, 3 நாட்கள் மட்டுமே வைத்து பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தை, மேலும் பல மாற்றங்கள் செய்து, பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும் போது, வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.  இந்த நிகழ்ச்சியில் இந்திய உணவு பயிர் பதன கழக இயக்குனர் அனந்த ராமகிருஷ்ணன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.