மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நாட்டின் தலைநகர் டெல்லியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடையடைப்பு போராட்டங்கள் மற்றும் ரயில் மறியல் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் இன்று காலை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 



 

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், வலங்கைமான், குடவாசல், கொரடாச்சேரி, கோட்டூர், நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின் தொடர்ச்சியாக திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 3 உழவர் விரோத சட்டங்களையும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்திட வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும்.

 



 

தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயிலை திருவாரூர் அருகே சிங்களாஞ்சேரி என்னுமிடத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மற்றும் திமுக விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரஸ் மதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி விவசாய சங்கங்கள் சார்பில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, பேரளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.