தஞ்சாவூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் சிறப்பு விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்காக மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் மே 3ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி. தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அதன் விபரம் வருமாறு.

மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதிக்கு தேர்வு  செய்ய நேரு விளையாட்டரங்கம். சென்னை.  தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்துபந்து, பளுதூக்குதல்,  வாள்வீச்சு மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி - கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்:  ஹாக்கி மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி - நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை. தடகளம், குத்துச் சண்டை, கையுந்துபந்து, கால்பந்து, பளுதூக்குதல், ஜுடோ மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி - காட்பாடி. வேலூர். கூடைப்பந்து,  கைப்பந்து,  ஹாக்கி, கபாடி

மேற்காணும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக விளங்குவதற்கு (01.01.2023 அன்று) 17 வயது நிரம்பிய 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற /கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவ / மாணவிகள் தகுதியுடையவர் ஆவர்.

தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGF) / விண்ணப்பிக்கலாம்.

இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். கையுந்துபந்து விளையாட்டில் 185 - செ.மீ.-க்கு மேல் உயரமுள்ள மாணவர்கள் மற்றும் 175 செமீ - க்கு மேல் உயரமுள்ள மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள், சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை www.sdat.tn.gv.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் வரும் மே 1ம் தேதி மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய செல்போன் 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் மே 3ம் தேதி அன்று காலை 7 மணியளவில் கீழ்கண்ட இடங்களில் நடக்கிறது.
 
நேரு விளையாட்டரங்கம். பெரியமேடு, சென்னையில்  தடகளம் (ஆண் & பெண்கள்). குத்துச்சண்டை (ஆண்கள் & பெண்கள்), பளுதூக்குதல் (ஆண்கள் & பெண்கள்), கபாடி (பெண்கள் மட்டும்), கூடைப்பந்து (ஆண்கள் & பெண்கள்), கையுந்துபந்து (ஆண்கள் & பெண்கள்), வாள்வீச்சு (ஆண்கள்), கால்பந்து (பெண்கள்). கைப்பந்து (பெண்கள்) நடக்கிறது.


எம். ஆர். கே ஹாக்கி ஸ்டேடியம் எழும்பூரில் வளைகோல்பந்து (ஆண்கள் & பெண்கள்) தேர்வு நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.