தஞ்சாவூர்: சொத்துக்களை பறித்து கொள்வதற்காக துன்புறுத்தி வீட்டை விட்டு மகன் வெளியேற்றியதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கணவன், மனைவி இருவரும் தஞ்சை கோட்டாட்சியர் (பொ) பழனிவேலிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில் சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி மேரி லலிதா ஆகியோர் தஞ்சாவூர் கோட்டாட்சியர் (பொ) பழனிவேலுவிடம் நேற்று மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: எனது மகளின் கணவர் இறந்து விட்டதால், குழந்தையுடன் எங்களுடன் வசித்து வந்தார்.

எனது மகனுக்கு திருமணம் முடிந்து சில நாட்களில் மாமனார் வீட்டோடு சென்று விட்டார். தற்போது எனது கணவர் சந்திரசேகரன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வரும் பென்ஷன் தொகையை வைத்துதான் வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எங்களின் மகன் என்னையும், எனது கணவர் மற்றும் மகள், அவரது குழந்தைகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தினார். மேலும் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை பூட்டி விட்டார். இதனால் எனது மகள் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டார். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்றாம். இதனையறிந்த எனது மகன் மற்றும் மருமகள், அவரது உறவினர்கள் அங்கு வந்து எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி, வீட்டினை பூட்டி விட்டு, சொத்துக்களை எங்களது பெயரில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். இதனால் பயந்து போய் தற்போது சமயபுரம் மற்றும் மாரியம்மன் கோயிலில் கடந்த ஒன்றரை மாதங்களாக வசித்து வருகின்றோம்.

தற்போது இருவருக்கும் உடல் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. எனவே என் மகனிடம் இருந்து எங்களின் வீடு, ஆவணங்கள், தங்க நகைகள், பணம் ஆகியவற்றை மீட்டு தர வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவு உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. மருமகளின் உறவினர், காவல் துறையில் இருப்பதால், எங்கள் மீது பொய் புகார் தந்து எனது மகளின் மீது விபச்சார வழக்குப் பதிந்து விடுவதாக மிரட்டுகின்றனர்.

எனவே, எங்களுக்கு அந்த வீடு மற்றும் எனது மகன் எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களை மீட்டுத் தர வேண்டும் அல்லது நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.