தஞ்சாவூர்: தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக ஓடும் பேய்வாரி வாய்க்கால் செடி, கொடிகள் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. தற்போது மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக பேய்வாரி வாய்க்கால் ஓடுகிறது. இதன்வாயிலாக 8 நம்பர் கரம்பை, களிமேடு, பிள்ளையார்நத்தம் உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள  ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.   இந்த பேய்வாரி வாய்க்கால் சக்கரசாமந்தம், களிமேடு வழியாக செல்கிறது.


இந்த பேய்வாரி வாய்க்கால் முறையாக முழுமையாக தூர்வாரப்படவில்லை. இதனால் தற்போது செடி, கொடிகள் மண்டி வாய்க்காலா அல்லது காடா என்று தெரியாத அளவிற்கு மாறி உள்ளது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


இந்த பேய்வாரி வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி, சக்கரசாமந்தம், களிமேடு உட்பல பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் உள்வாங்கும் இந்த பேய்வாரி வாய்க்கால் தற்போதைய நிலையில் சிறிய மழைக்கு கூட தாங்காது என்பது போல் மாறி உள்ளது.


இதனால் தண்ணீர் ஓட வழியின்றி உள்ளது. மேலும் இந்த பேய்வாரி வாய்க்காலில் குப்பைகளும் கொட்டப்படுவதால் தூர்ந்து போய் காணப்படுகிறது. இந்த கோடைகாலத்திலேயே  பேய்வாரி வாய்க்காலை குருவாடிப்பட்டி தலைப்பில் இருந்து வண்ணாரப்பேட்டை, ராமநாதபுரம் வழியாக முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தினால் விவசாயிகள் சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி செல்லும்.


இல்லாவிடில் மழை பொழிவு அதிகம் இருந்தால் வாய்க்காலில் தண்ணீர் ஓட முடியாமல் வயல்களில் தேங்கி சேதத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பேய்வாரி வாய்க்காலை முழுமையாக தூர் வாரி தண்ணீர் தடையின்றி ஓட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், இந்த பாசன வாய்க்காலால் இப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது. முக்கியமாக குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் இந்த வாய்க்கால் வழியாக பாசனம் பெறும் பகுதிகள் வெகுவாக பயனடைந்து வருகின்றன. இந்த பாசன வாய்க்காலை நம்பியே ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.


கடந்தாண்டும் இந்த பாசன வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இதை முழுமையாக தூர்வாரினால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். மழை அதிகம் பெய்தால் இந்த பாசன வாய்க்காலில் திறந்து விடுவோம். இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்காது. ஆனால் தற்போது மண்மேடிட்டு இருக்கிறது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையின் போது இப்பகுதியில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்க இந்த பாசன வாய்க்கால் தூர்வாரப்படாததும் ஒரு காரணம் ஆகும். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த பேய்வாரி வாய்க்காலை இந்த கோடை காலத்திலேயே முழுமையாக தூர் வாரித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.