தஞ்சாவூர்: பொங்கலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். காரணம் தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பொங்கல் பானைகள் மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுதான்.


தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று பொங்கல் பண்டிகை. புது அரிசியில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையில் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் கொத்து போன்றவை முக்கிய இடம்பெறும். பொங்கல் பண்டிகைக்கு பாரம்பரிய முறையில் பொங்கல் வைப்பதற்காக மண் அடுப்பு, மண்பானைகள் வாங்குவது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகைக்கு ஒருமாதத்துக்கு முன்பிருந்தே பொங்கல் பானைகள் மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடப்பது வழங்கம்.

தஞ்சையில் பழைய மாரியம்மன்கோவில் சாலையில் பொங்கல் பானைகள் மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் ஏராளமான குடும்பங்கள் ஈடுட்டு வருகின்றன. இங்கு தயார் செய்யப்படும் மண்பானைகள், அடுப்புகள் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும் மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது வழங்கம். பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே பானைகள் மற்றும் அடுப்புகள் விற்பனையும் கனஜோராக நடக்க ஆரம்பிக்கும்.




ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி பெய்தது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்திலும் மழை விட்டு, விட்டு பெய்து வந்தாலும் வெயில் அடிக்கவில்லை. இதனால் மண்பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும்
தயார் செய்த பானைகளை சூளையில் வைத்து சுடுவதற்கு தேவையான வைக்கேல், தேங்காய் மட்டைகள் போன்றவையும் காயவில்லை. இதனால் அடுப்புகள் மற்றும் பானைகள் தயாரிப்பவர்கள் தங்கள் பணிகளை தொடரவில்லை. கடந்த 2 நாட்களாகத்தான் வெயில் அடிக்கத் தொடங்கி உள்ளது. இருப்பினும் பகல் மற்றும் மாலை வேளையில் பனி அதிகம் பெய்கிறது. இருப்பினும் தற்போது பானைகள் மற்றும் அடுப்புகள் தயாரிககும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் மண்விலை உயர்வு, வைக்கோல், தேங்காய் மட்டை போன்றவை விலை உயர்வதால் மண் அடுப்புகள் மற்றும் மண்பானைகளும் கிடுகிடுவென்று விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறைந்த அளவே பானைகள், அடுப்புகளை உற்பத்தி செய்ய முடியும் என்ற காரணத்தாலும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது மண்ணுக்கு சரக்கு ஆட்டோவுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம், ரூ.200-க்கு வாங்கிய வைக்கோல் கட்டு தற்போது ரூ.300-க்கும், ரூ.1-க்கு வாங்கிய தேங்காய் மட்டைகள் தற்போது ரூ.1.50-க்கும், மணல் கூடுதலாக ரூ.1000-த்துக்கும் வாங்கப்படுகிறது.

மண் விலை உயர்ந்தாலும் கேட்ட விலை கொடுக்க தயாராக இருந்தும் மண் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் கடந்த ஆண்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட அடுப்பு தற்போது ரூ.150-க்கும், 150-க்கு விற்பனை செய்யப்பட்ட அடுப்பு ரூ.200-க்கும், 200-க்கு விற்பனை செய்யப்பட்ட அடுப்பு ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதேபோல் இரட்டை அடுப்பு ரூ.450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் மண்பானைகளும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ரூ.100 முதல் ரூ.500 வரையில் மண்பானைகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்ட பானைகள் தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மண்பானைகள் ரூ.50 வரையிலும் விலை உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மண்அடுப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தரப்பில் கூறுகையில், மண்பானை, அடுப்புகளுக்கு என்று தனி மவுசு உள்ளது. நாங்கள் வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்து தயார் செய்வோம். ஆனால் தற்போது மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அடுப்புகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆண்டு உற்பத்தி குறைவு காரணமாகவும், மண் விலை உயர்வு காரணமாக அடுப்புகளின் விலையும் உயர்ந்துள்ளது. அடுப்புகளுக்கு ரூ.50 விலை உயர்ந்துள்ளது. எனவே அரசு, களி மண் எடுப்பதற்காக குவாரிகள் உள்ளன. அதனை முறைப்படுத்தி, எங்களைப் போன்ற மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கினால் இந்த தொழில் நலிவடையாமல் ஏற்றம்பெற ஏதுவாக இருக்கும் என்றனர்.