தஞ்சாவூர்: தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் மொன்னையம்பட்டி புனித அந்தோணியார் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் தலைமையில் நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.


மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), அன்பழகன் (கும்பகோணம்), அண்ணாதுரை  (பட்டுக்கோட்டை), அசோக்குமார் (பேராவூரணி), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திட மக்களுடன் முதல்வர்  என்ற புதிய திட்டத்தை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் செயல்படுத்திட சிறப்பு முகாம்களை தமிழக முதல்வர் கடந்த 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் தொடக்கி வைத்தார்.




மக்களுடன் முதல்வர் என்ற இந்த புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் எரிசக்தித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,  காவல்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, கூட்டுறவுத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய 13 அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து  நகர்ப்புறங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.


அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முதற்கட்டமாக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 8.74 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. நகரப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பினை அடுத்து, மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப்பகுதிகளிலும் விரிவுபடுத்தினார்.  தொடர்ந்து முதல்வர் தருமபுரியில் தொடங்கி வைத்தார்.


15 துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் நேரடிக் கண்காணிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 15.07.2024 முதல் தொடர்ச்சியாக மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரகப்பகுதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.


இவ்விபரங்கள் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விபரங்கள் செய்தி வாயிலாகவும்,  சம்மந்தப்பட்ட ஊராட்சிகள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். அந்தந்த ஊராட்சிப் பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவிருக்கும் முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாட்களில் மக்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்தார்.


மேலும், அரசு தலைமை கொறடா  கோவி.செழியன், மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் ஆகியோர் முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பதிவு செய்து சிறப்பு முகாமினை பார்வையிட்டு பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தததை தொடர்ந்து, முதல்வரின் விரிவாக மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீட்டிற்கான அட்டைகளை வழங்கினார்.


இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர், மாவட்ட ஊராட்சித் குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தஞ்சாவூர் ஒன்றியக் குழுத் தலைவர் வைஜெயந்திமாலா கேசவன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் அருளானந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.