தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் சம்பா சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தஞ்சை அருகே காராமணிதோப்பு பகுதியில் விவசாய தொழிலாளர்கள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய மழையால் வயல்களில் களை வளர்ந்து இருக்கிறது என்பதால் விவசாயிகள் களை எடுக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.


நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டம்


தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஒரு சில பகுதிகளில் சம்பா சாகுடிக்கான பணியிலும் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு சம்பா, தாளடி, குறுவை என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.


களை எடுக்கும் பணிகள் மும்முரம்


இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சை மாவட்டம் மருங்குளம், குறுங்குளம், சாமிப்பட்டி, காராமணிதோப்பு, வேங்கராயன்குடிகாடு, சாலியமங்கலம், அம்மாப்பேட்டை, பூண்டி, மாரியம்மன் கோவில், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், ஒரத்தநாடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்  சம்பா வயல்களில் களை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் களை எடுக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.


காலை வேளையில் வெயில் அடித்தாலும் மாலையில் மழை பெய்கிறது. இதனால் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொண்டுள்ளனர். பல இயற்கை இடர்பாடுகளை தாண்டி தங்கள் விளைவித்த நெல் பயிர்கள் நன்கு வளர்ந்து இருப்பதை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சில பகுதிகளில் சம்பா நாற்று நடும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


சம்பா சாகுபடிக்கு 3.45 லட்சம் இலக்கு


தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 3.45 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1.50 ஏக்கர் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. சம்பா சாகுபடி பொருத்தவரையில் விவசாயிகள் நீண்ட நாட்கள் ரகமான நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். தற்போது ஒரு சில பகுதிகளில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகளும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் சாலையில் போட்டு உலர்த்தி வருகின்றனர்.


மழையால் வயலில் சாய்ந்த அறுவடைக்கு தயாராக இருந்த நெல்


மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக பல்வேறு பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த சில இடங்களில் சமீபத்தில் பெய்து வரும் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்கள் அனைத்தும் சாய்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழை பெய்து வருவதால் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதத்தை தளர்த்தி கொண்டு அரசு சார்பில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இடுப்பொருட்களையும் இருப்பு வைத்திருக்க வேண்டும்


இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல்தான் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. நடப்பாண்டு மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் நடந்துள்ளது.


கடந்த சில நாட்களாக பெய்த மழையை பயன்படுத்தி வயலை உழுது  நாற்றுக்களை நடும் பணிகளில் உள்ளோம். சிலர் நாற்று நட்டு ஒரு வாரம் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருவதை பயன்படுத்தி சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தற்போது மழை அதிகம் பெய்து வருவதால் களைகளும் அதிகம் வளர்ந்து உள்ளது. இதனை பறிக்கும் பணியில் பெண் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சம்பா சாகுபடிக்கு தீவிரமாக நடைபெற்று வருவதால் அனைத்து இடுப்பொருட்களையும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.