தஞ்சாவூர்:  ஆறு வயது சிறுமிக்கு குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.



முத்துப்பேட்டையை  சேர்ந்தவர் வேலுச்சாமி (49). கூலித் தொழிலாளி. இவர்  2016 -ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பட்டுக்கோட்டை அருகே தனது நண்பரின் வீட்டுக்கு வந்த போது, அங்கிருந்த 6 வயது சிறுமிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.

இதேபோல் கடந்த 12ம் தேதியன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த 51 வயதான விவசாய கூலித் தொழிலாளி பிளஸ் 2 படித்து வந்த தனது மகளிடம் முறைகேடாக நடந்து ொண்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தர்ராஜன் விசாரித்து தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட மகளுக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சை அருகே காற்றுக்காக  கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த  விவசாயி வீட்டில் 21 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சையை அடுத்த வல்லம் அற்புதாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செங்கோல் பீட்டர் ( 51)விவசாயி. இவர் முந்திரி வியாபாரமும் செய்து வருகிறார்.  இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்  இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்  அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை திறந்து அதிலிருந்து  நெக்லஸ், செயின், மோதிரம், வளையல் உட்பட  21 பவுன் நகை,  ரூ. 27 ஆயிரத்தையும் திருடியுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்த செங்கோல் பீட்டர் சத்தம் போட்டு அலறியுள்ளார்.

அதற்குள் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து வல்லம் போலீசில் செங்கோல் பீட்டர் புகார் செய்தார். இதன் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.