தஞ்சாவூர்: வெள்ளித்திரை, சின்னத்திரை என்று எத்தனை வர்ணஜாலம் காட்டினாலும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி கடந்த 200 ஆண்டுகளாக தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராம மக்கள் இரவில் சரித்திர நாடகங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதில் அந்த கிராம மக்களே கதாபாத்திரங்களாக நடிப்பதுதான் சிறப்பிலும் சிறப்பு.


தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை வெகு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொக்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கம்.


இரவில் பொதுமக்கள் தூங்காமல் கண்விழித்து இருக்க  வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும்,  அந்த இரவை பொழுதுபோக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி மூன்று நாட்களுக்கு சரித்திர நாடகங்களான வள்ளி திருமணம், ருக்மாங்கதன், இராமாயணம், சத்தியவான் சாவித்ரி நாடகங்கள் நடத்தப்படுகிறது.


இந்த நாடகங்களுக்கு தேவையான கதாபாத்திரங்களுக்குரியவர்களாக கிராம மக்களே நடித்து வருகின்றனர் என்பதும்தான் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே ஏற்று நடிக்கின்றனர். சரித்திர நாடகங்களை இந்த கிராம மக்கள் இன்றும் பாரம்பரியத்தோடு நடத்தி இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்தாண்டும் மூன்று நாட்களும் வள்ளித் திருமணம், ருக்மாங்கதன், சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட சரித்திர நாடகம் நடத்தப்பட்டது.


இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் கூறுகையில், எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் சரித்திர நாடகங்களை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறோம். இந்த கிராமத்தில் பிறந்த ஆண்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பதை கனவாக கொண்டு நடித்து வருகிறோம். நாடகம் நடத்த ஏழு தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்ததும், இதற்காக விரதம் தொடங்கிவிடும். நாடக கலைஞர்கள் எல்லோரும் விரதம் இருந்து நடித்து வருகிறோம்.


நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் நாங்கள் சொந்தமாக வைத்திருக்கிறோம். இரவு பத்து மணிக்கு தொடங்கும் நாடகம் அதிகாலை 5 மணிக்கு முடியும்.


நாங்கள் எல்லோரும் ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை நினைத்து தான், அவரது படத்தினை வைத்து வழிபட்டு வருகிறோம். பின்னர் சித்திரை மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு சென்று சித்திரை தேரோட்டத்தில் எங்களது கிராம மக்கள்  சுமார் 100 பேராவது சென்று பாட்டுப்பாடி, தேர் வடம் பிடித்து, பெருமாளை வழிபட்டு ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து தரிசனம் செய்து வருவதை இன்றளவும் கடைபிடித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


வெள்ளித்திரை, சின்னத்திரை, ஓடிடி என்று எத்தனை விஞ்ஞான வளர்ச்சிகள் மக்களை ஆக்கிரமித்தாலும் கொல்லாங்கரை மக்களின் இந்த சரித்திர நாடகங்களுக்கு உள்ள வரவேற்பே தனிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.