எல்லாருக்கும் ஆசைகளும், கனவுகளும் இருக்கும். ஆனால், சிலரால் மட்டுமே அவற்றை பூர்த்தி செய்ய முடியும். அதற்கு முக்கிய காரணம் கடுமையான உழைப்பு, நம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவைதான். வெற்றியை தேடி பயணிக்கும் அனைவருக்கும் இது பொதுவான ஒன்றாக இருக்கிறது.




அதுபோல் வெற்றி என்ற கோப்பைகளை சரமாரியாக தங்கள் வசமாக்கிக் கொண்டு அசத்தி புன்னகை செய்கின்றனர் தஞ்சை மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர நல உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள்.

வாழ்க்கையில் வறுமை வாட்டினாலும் விளையாட்டில் அதை காண்பிக்காமல் தங்களின் கடும் முயற்சியால் வெற்றி படிக்கட்டுகளில் விரைவாக ஏறிக் கொண்டிருக்கின்றனர் இப்பள்ளி மாணவ, மாணவிகள் என்றால் மிகை இல்லை. விளையாட்டு மட்டுமின்றி பாட்டுப் போட்டியிலும் சிறந்து விளங்கும் பத்தாம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி. அப்பா மோகன் தூய்மை பணி காவலர். அம்மா ஸ்டெல்லா, தம்பி வெங்கடேஸ்வரன். மாணவி பிரியதர்ஷினி தனது பாடும் திறமையால் அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறார். பல போட்டிகளில் வென்று பரிசுகளையும் பெற்றுள்ளார். விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ள இம்மாணவி கடந்த வாரம் நடந்த மாவட்ட அளவிலான பாட்டு போட்டியில் முதல் பரிசு பெற்று அசத்தியுள்ளார். மேலும் 2018 ஆம் ஆண்டு பாட்டுப் போட்டியில் பங்கேற்று பாராட்டு சான்றிதழ், இரண்டாம் பரிசு, ஓவிய போட்டியில் மூன்றாம் இடம், 2019 ஆம் ஆண்டு பாட்டு போட்டியில் சான்றிதழ், 2019 - 2020 இம் ஆண்டில் நடந்த பாட்டு போட்டியில் முதலிடம் என்று தனது இனிமையான குரல் வளத்தால் சாதனை படைத்து வருகிறார். மாணவி பிரியதர்ஷினி நாட்டுப்புற பாடல் மற்றும் மெல்லிசை பாடல்கள் பாடுவதில் வல்லவராக திகழ்கிறார்.

இதேபோல் பத்தாம் வகுப்பு மாணவி அக் ஷரா சிறுவயதில் இருந்து பல போட்டிகளிலும் வெற்றிகளை குவித்து சான்றிதழ்கள், விருதுகள் என்று தனது புகழ் கொடியை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். இவரது தந்தை ஐயப்பன் சுயதொழில் செய்கிறார். தாய் ஜெயஸ்ரீ. அண்ணன்கள் சுரேஷ், கணேஷ். மாணவியின் வெற்றிகள் சில:

உடை அலங்காரத்தில் வெற்றி, நீதிக்கதை சொல்லுதலில் சான்றிதழ், யோகா, ஆசிரியர் தின பேச்சு போட்டியில் முதலிடம், திருக்குறள் ஒப்புவித்தலில் முதலிடம், தேசிய அறிவியல் தினம கண்காட்சியில் முதலிடம், நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்று பாராட்டு சான்றிதழ் என வெற்றி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதே பள்ளியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி, தந்தை ரகுராமன். காலமாகிவிட்டார். தாய் சாவித்திரி நெசவுப்பணி செய்கிறார். அக்கா பாரதி, கவிதா என இருவர், 2019ல் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்பு, சிலம்பப் போட்டியில் மூன்றாம் பரிசு, நாட்டியத்தில் முதல் பரிசு, பள்ளிக்கு வருகை தந்ததில் முதல் பரிசு, ஓவியம், கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல், தேசிய அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்பு| பாட்டு போட்டியில் முதல் பரிசு, கோகோ போட்டியில் முதல் பரிசு கராத்தே போட்டியில் மூன்றாம் இடம் என தனது வெற்றிப் படிகளை சான்றிதழ்களாலும் கோப்பைகளாலும் நிறைத்து வைத்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ. இவரது தந்தை முருகேசன். கொத்தனார். தாய் பூமாதேவி . அக்கா கனிமொழி. இம்மாணவி சிலம்பப் போட்டியில் இரண்டாம் இடம், குழு நடனத்தில் பங்கேற்பு,மராத்தான் போட்டியில் பங்கேற்பு, ஆங்கில கையெழுத்துப் போட்டி, கட்டுரை போட்டி, கும்மியாட்டம், தமிழ் கையெழுத்து போட்டி, பள்ளிக்கு வருகை தந்தது 100 சதவீதம் என சாதனை செய்து வருகிறார்.

பத்தாம் வகுப்பு மாணவர் பிரவீன் குமார் தந்தை சரவணன் தனியார் பணி. தாய் ராஜேஸ்வரி மளிகை கடையில் வேலை பார்க்கிறார். அண்ணன் கதிர்வேல். மாணவர் ஆங்கில பேச்சுப் போட்டியில் மூன்றாம் இடம் பள்ளி அளவிலான திருக்குறள் மூன்றாம் இடம் தஞ்சாவூர் புத்தக கண்காட்சி வினாடி வினா போட்டியில் முதலிடம் ஓவியப் போட்டியில் சிறப்பு இடம் சிலம்பாட்டத்தில் முதலிடம் என ஏகப்பட்ட போட்டிகளில் வெற்றிகளை தனத்தாக்கி கொண்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவி தமிழ் இலக்கியா. அப்பா அண்ணாதுரை தனியார் பணி. அம்மா தமிழ்செல்வி தம்பி தமிழரசு. மாணவி ஓவிய போட்டியில் ஆறுதல் பரிசு மூன்றாம் பரிசு தேசிய அறிவியல் கண்காட்சியில் ஆறுதல் பரிசு குரூப் டான்ஸ் போட்டியில் முதல் பரிசு திருக்குறள் ஒப்புவித்தலில் சாதனை கட்டுரை போட்டியில் முதல் பரிசு மராத்தான் போட்டியில் பங்கேற்பு என சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி. தந்தை பிரபு ராம் ஹோட்டல் பணியாளர் தாய் மல்லிகா அக்கா அஸ்வினி, திவ்யா என இருவர். இம்மாணவி ஓவிய போட்டி, மராத்தான், சிலம்ப போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கணித கண்காட்சி போட்டி, கராத்தே போட்டி, அறிவியல் தின கண்காட்சி போட்டி, குரூப் டான்ஸ் என முதல் பரிசு, மூன்றாம் பரிசு, ஆறுதல் பரிசு கோப்பைகள் சான்றிதழ்கள் என பெற்றுள்ளார்..

பத்தாம் வகுப்பு மாணவி சின்னமணி. தந்தை ராஜா தனியார் பணி. அம்மா தங்க பொண்ணு, தம்பி புகழ்நிதி, சகோதரிகள் சிவசூர்யா, கவி. இந்த மாணவி மராத்தான் போட்டியில் பங்கேற்று சான்றிதழ், கராத்தே சாம்பியன்ஷிப்பில் முதலிடம், நடனப் போட்டியில் இரண்டாம் இடம், அறிவியல் தின கண்காட்சியில் மூன்றாம் இடம், சிலம்பாட்ட போட்டியில் முதலிடம், இரண்டாம் இடம் திருக்குறள் ஒப்புவித்தலில் முதலிடம் என பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்று சாதித்து வருகிறார்.

பத்தாம் வகுப்பு மாணவி சரஸ்வதி, அப்பா நாடிமுத்து. ஓட்டுநர், அம்மா சசிகலா, தங்கை காவியா, இம்மாணவியின் வெற்றிகளில் சில; கோக்கோ போட்டியில் முதலிடம், தற்காப்பு கலையான கராத்தே போட்டியில் இரண்டாம் இடம், அறிவியல் கண்காட்சியில் ஆறுதல் பரிசு, பேச்சு போட்டியில் முதலிடம் ஓவியத்தில் பங்கேற்று சான்றிதழ், திருக்குறள் ஒப்புவித்தலில் முதலிடம், மராத்தன் போட்டியில் பங்கேற்பு என சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவி வீரலட்சுமி தந்தை பாபு தூய்மை காவலர் பணி. தாய் மாரியம்மாள் தனியார் பணி அண்ணன் வீரமணி. இம்மாணவி பேச்சுப்போட்டி முதலிடம், மாரத்தான் போட்டியில் பங்கேற்பு, சிலம்ப போட்டியில் மூன்றாம் இடம், திருக்குறள் ஒப்புதல் முதலிடம், பேச்சு போட்டியில் இரண்டாம் இடம் என தனது ஏராளமான வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.